வடக்கு மாகாணத்தின் எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை!

234 0

நான்கு வருடங்களில் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிட்டத்தட்ட 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை .

கல்வி இராஜாங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரன். தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு உட்பட்ட பிரதேசம், யுத்தத்திற்கு உட்பட்ட மாகாணம் எனக் கூறி சர்வதேசத்திலே இருந்து நிதிகளை பெற்றுக் கொண்டு வந்து ஏனைய ஏழு மாகாணங்களையும் அபிவிருத்தி செய்தார்கள். கடந்த காலங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் இங்கு எதுவுமே நடக்கவில்லை. என கடந்த கால அரசை கடுமையாக சாடினார் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். 

தும்பளை சிவப்பிரகாச மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்.

எமது பிரதேசங்களில் உள்ள எந்த ஒரு பாடசாலைக்கு சென்றாலும் ஏதோ ஒரு குறையுடன் இருக்கிறது. அக் குறைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.  ஆனால் கடந்த காலங்களில் நிறைய நிதிகள் இருந்தும் அவை அபிருத்தி செய்யப்பட வில்லை.  வடமாகாணசபை இருந்த ஐந்து வருடமும் வருட வருடம் நிதிகள் திறைசேரிக்கு திரும்பி சென்ற வரலாறுகள் உண்டு. 

தற்போது வட மாகாண சபை இல்லாத காரணத்தால் இந்த மாகாண சபை பாடசாலைகளை மத்திய அரசின் கல்வி அமைச்சின் ஊடாக அபிவிருத்தி செய்து வருகிறோம். தற்போது மூன்று மாதத்திற்கான நிதி கடந்த வரவுச் செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வரவு செலவு திட்டத்தில் வடக்கு,கிழக்கு, மலையகத்திற்கு என நிதிகளை கேட்டிருக்கிறோம்.

கடந்த நான்கு வருடங்களில் வடக்கு மாகாண பாடசாலைகளிற்கு கிட்டத்தட்ட 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை. ஆனால் நகர் பாடசாலைகளிற்கு சென்றால் அனைத்து வசதிகளும் உண்டு .

கிராம புற பாடசாலைகளில் கல்வி கற்று ஐந்தாம் தர புலமைப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்தி நகர் பாடசாலைகளிற்கு சென்று அப்பாடசாலைகளிற்கே பெருமை தேடிக் கொள்கிறார்கள். இதனால் கிராமப் புற பாடசாலைகள் புறம்தள்ளப்படுகிறது  இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

கடந்த காலங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் இங்கு எதுவுமே நடக்கவில்லை.  மாகாண சபை, பிரதேசசபைகளிற்கு உட்பட்ட வீதிகள் புனரமைக்கப்படவில்லை ஆனால்  வந்த நிதிகள் திரும்பிச் சென்றிருக்கின்றன.

ஆனால் இந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலே கம்பரலியா திட்டத்தில் ஒவ்வெரு தொகுதிக்கும் 300 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பிரதேசசபைகள் ஆட்சி மாறி மாறி தங்களது வாக்கு வங்கிகளை தக்கவைத்ததே தவிர அபிவிருத்தி செய்யவில்லை.

இதனாலே ஒவ்வொரு தொகுதிக்கும் 300 மில்லியன் ஒதிக்கீடு செய்து அந்த தொகுதிக்கே பயன்படுத்த வேண்டும் சொல்லப்பட்டுள்ளது என்றார்.

கம்பரலியா திட்டத்திலும், விஷேட நிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பேசும் போதும் கூடுதலான நிதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.  எமது கல்வி அமைச்சின் மூலமாகவும் நிதிகளை கொண்டுவருவேன். 

மேலும் தொகுதி ரீதியாக ஒவ்வொரு பாடசாலைகளை கட்டாயம் தேசிய பாடசாலையாக உள்வாங்க வேண்டும் என்றார்.