இலஞ்சம்பெற்ற குற்றச்சாட்டுக்காக களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லக்ஷ்மன் விதானபத்திரனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, அதனை ஐந்து ஆண்டுகளில் அனுபிக்க உத்தரவிட்டார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு களுத்துறை பகுதியிலுள்ள காணியொன்றின் நுழைவு பகுதியில் உள்ள வயல் நிலம் ஒன்றூடாக வீதியொன்றை அமைப்பதற்காக ஒருவரிடம் 30 இலட்சம் ரூபா பெற்றதாக களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லக்ஷ்மன் விதானபத்திரனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத்தாக்கல் செய்திருந்தது.
ஏற்கனவே அது தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் இருந்து வந்த நிலையில், அவ் வழக்கு தொடர்பில் நீண்ட விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இந் நிலையிலேயே வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.