கடவுளர்களின் கொலைகள்…!

256 0

முன்பொரு நாள்
விலை பேசப்பட்டிந்த நான்
நேற்று நள்ளிரவில்
கொல்லப்பட்டிருந்தேன்

ஈக்கள் மொய்க்கும் என்
உடலை வேடிக்கை பார்க்க
பலரும் ஒன்றுகூடியிருந்தனர்

நான் அவர்களை பலமுறை
மறுதலித்திருக்கிறேன்
அவர்களின்
“மண்டையில் போடுதல்கள்”
என்னை பலமுறை சினமூட்டியிருந்தன

பிணங்களின் வாடையை
முகர்ந்து ருசிக்கும் அவர்களை
ஈவிரக்கமற்றவர்கள் என
நான் எழுதியிருக்கிறேன்

அவர்கள் சுவர்களில்
தொங்கும் கடவுளர்கள் போல
என்னை ஏளனம் செய்தனர்
பின் தாங்களே
கடவுளர்கள் என்றனர்

ஏழைகளின் நேர்த்திக் கடன்போல்
அவர்களிடம் நீண்டதொரு
பட்டியல் இருந்தது
அதில் எனது பெயருக்கு
வரம் அளிக்கப்பட்டிருந்தது

சிலர் என்னைப் பின்தொடர்ந்தனர்
சிலர் என பிணத்திற்கு
விலை பேசிச் சென்றனர்
நேற்று நள்ளிரவில்
நான் கொல்லப்பட்டிருந்தேன்

பின்பு அவர்கள் 
சகோதரப் படுகொலைகள் பற்றிப்
பேசித் திரிந்தனர் 
மாநாடுகளின் போது

கலியுகன்
06.02.2019

Leave a comment