தி.மு.க.வில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம் ஓ.பன்னீர்செல்வம் மகன் உள்பட பலர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்!

207 0

போட்டியிட விரும்பு பவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் அ.தி.மு.க.வில் தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம் மகன் உள்பட பலர் ஆர்வத்துடன் மனுக்களை பெற்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் தேதிக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தேர்தலை சந்திக்க தமிழக கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகிறது. பிரதான கட்சியான அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கியிருக்கிறது. முதல் கட்டமாக, நேற்று முதல் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக் களை அக்கட்சி பெற தொடங்கியுள்ளது. 

ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு வினியோகத்தை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று காலை 9.45 மணிக்கு தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விருப்ப மனுக்களை வாங்குவதற்காக ஏராளமான தொண்டர்கள் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்திருந்ததால், கூட்டம் அலைமோதியது. விருப்பமனு கட்டணமான ரூ.25 ஆயிரத்தை செலுத்தி, மனுக் களை அவர்கள் பெற்றுக் கொண்டனர். சிலர் அங்கே மனுக்களை பூர்த்தி செய்து அளித்தனர்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத் குமார், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, முக்கூர் சுப்பிரமணியம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், வட சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் விருப்ப மனுக்களை பெற்றனர்.

விருப்பமனுவில், எந்த ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் இருக்கிறீர்கள், நீங்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், கட்சியில் வகிக்கும் பதவி, நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு, ஒவ்வொரு சமுதாயத்தினரின் எண்ணிக்கை விவரம், குறிப்பிட்ட தொகுதியில் நீங்கள் போட்டியிட விரும்பும் காரணம், உங்களுக்கு உள்ள வெற்றி வாய்ப்பு குறித்த விவரங்கள், கட்சியில் இருந்து எப்போதாவது நீக்கப்பட்டு இருக்கிறீர்களா?, சாதி அமைப்புகளில் தொடர்பு வைத்து இருக்கிறீர்களா?, கட்சிக்காக சிறை சென்று இருக்கிறீர்களா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

வரும் 10-ந்தேதி வரை தொண்டர்களிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறப்பட உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தொண்டர்கள் விருப்பமனுக்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமனு வினியோகத்தை தொடங்கி வைத்த பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் அமைப்பு செயலாளர்கள் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை எம்.எல்.ஏ., பி.எச்.மனோஜ் பாண்டியன், ரவி பெர்னார்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு விருப்பமனுக்களை பெற்று இருக்கிறார்கள். நாற்பதும் நமதே என்ற அடிப்படையில் தான் செயல்படுகிறோம். மாநிலத்தின் உரிமைகளை பேணி காக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூடி விவாதிக்கப்பட்டது.
தி.மு.க. சில கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அவர்களும் 40 தொகுதிகளுக்கும் விருப்பமனு வாங்குகிறார்கள். 40 தொகுதிகளுக்கும் விருப்பமனு வாங்குவதை வைத்து கூட்டணி இல்லை என்று சொல்ல முடியாது. அரசியலில் கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் சூசகமாக சொன்னதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமையும். உங்களுக்கு தெரிய வேண்டிய நேரத்தில் தெரியவரும்.

கொல்கத்தா பிரச்சினையை பொறுத்தவரையில் சி.பி.ஐ.க்கு அதிகாரம் இருக்கிறது. அவர்கள் கடமையை செய்கிறார்கள். அதற்கான வழிமுறையை சி.பி.ஐ. கையாள வேண்டும். விதிமுறைகள்படி நடந்தால் பிரச்சினை இல்லை. யார் விதிமுறைகளை மீறினாலும் தவறு தான். இதில் சி.பி.ஐ. வரைமுறையை மீறியதா? அந்த மாநில அரசு மீறியதா? என்பதை கோர்ட்டு தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment