சிரியா மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை

295 0

201610020957399815_gulf-arab-states-call-on-un-to-intervene-to-stop-aleppo_secvpfசிரியாவில் உள்ள அலெப்போ நகரின்மீது நடத்தப்படும் விமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆறு நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

சிரியாவில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றான அலெப்போ நகரை கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து போராளிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா – ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக அரசுப் படைகள் அங்கு நுழைந்துள்ளன.

ராணுவ டாங்கிகள் துணையுடன் காலாட்படையினர் அலெப்போ நகரை நோக்கி முன்னேறி சென்றுகொண்டுள்ள நிலையில் இங்குள்ள பஸ்தான் அல் – கஸ்ர் மாவட்டத்தில் உள்ள போராளிகளின் முகாம்கள் மீது சிரியா விமானப்படைகளும் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.

இந்த அதிரடி தாக்குதலால் இங்குள்ள ஒரு முக்கிய தெருவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தீபிடித்து எரிந்து கொண்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், அங்கு தொடரும் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும் பலநூறு பேர் காயம் அடைந்ததாகவும் சிரியாவில் உள்நாட்டுப்போர் நிலவரங்களை கண்காணித்துவரும் பிரிட்டன் நாட்டு மனித உரிமை பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பீப்பாய் குண்டுகள் மற்றும் கொத்து குண்டுகளையும், ஆபத்தான போர் ஆயுதங்களையும் சிரியா ராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாகவும் போராளி குழுக்கள் குற்றம்சாட்டி வருகின்றன. அலெப்போ நகரில் வாழும் சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நீரேற்ற நிலையம் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மற்றொரு நீரேற்ற நிலையத்தை போராளிகள் முடக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், சிரியாவில் நிலைமை தீவிரம் அடைந்து வருவதால் இதுதொடர்பாக விவாதிக்கவும், அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்தன.

இதனையேற்று, சிரியா விவகாரம் தொடர்பாக விவாதிக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.

இந்நிலையில், அலெப்போ நகரின்மீது நடத்தப்படும் விமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆறு நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு கூட்டமைப்பு (கவுன்சில்) தற்போது கோரிக்கை விடுத்துள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூனுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ’சர்வதேச சட்டங்களை மீறிய வகையில் அலெப்போ நகரில் நடத்தப்படும் மூர்க்கத்தனமான விமான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி, சிரியா மக்களின் வேதனையை தீர்க்க வழிசெய்யும் வகையில் ஐ.நா.சபையில் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.