கேப்பாப்புலவு போராட்டத்தில் குவிக்கப்பட்டனர் பொலிஸார்

1275 0

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு  இன்றைய நாள், 697ஆவது நாளில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் போராட்டக்காரர்கள் கேப்பாப்பிலவு பிரதான வாயிலில் தமது ஆர்ப்பாட்டத்தினைத் தொடங்கி, கேப்பாப்புலவு இராணுவ முகாம்வரையில் ஊர்வலமாகச் சென்று, இராணு முகாமின் வாயிலின் முன்பாகவும் தமது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

நேற்றைய தினம் முள்ளியவளைப் பொலிஸாரால், கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்கள் என இரு பெண்களுக்கெதிராக, பாதுகாப்புக்கருதி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுக்க அனுமதி வழங்கியிருந்து.
இந் நிலையில் இன்றைய நாள் மக்கள் ஜனநாயக வழியில் தமது நிலமீட்பைக் கோரி போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், கனகரகவாகனங்கள்,ஜீப், மற்றும் பஸ்வண்டிகள் போன்றவற்றில், பல இடங்களிலுமிருந்து பொலிஸார் கொண்டுவரப்பட்டு போராட்ட இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் இராணுவ முகாம் வாயில், பாதுகாப்பு வரியல் இடப்பட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுமிருந்தனர்.

அதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ முகாமிற்கு எதிராக, வீதியின் மறுபுறம் மதிய உணவு சமைப்பதற்கு முற்பட்ட வேளை, பொலிஸார் இராணுவ முகாமிற்கு முன் உணவு சமைக்க முடியாதென தடுத்ததால் ஆர்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு,பின் பொலிஸார் உணவு சமைக்க அனுமதி வழங்கிய நிலையில், மதிய உணவும் மக்களால் இராணுவ முகாமிற்கு எதிராக சமைக்கப்பட்டது.

ஆர்பாட்ட இடத்திற்கு வருகை தந்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் அவர்கள், ஆர்ப்பாட்க்காரர்களிடம் தாம் தொடர்ந்தும் இது தொடர்பாக கரிசனையுடன் செயற்படுவதாக கூறினார். ஆயினும் ஆர்பாட்டக்காரர்கள் மிகவும் கொதிப்புடன் இருந்ததால், அவர்களின் நிலைப்பாட்டை அரசாங்க அதிபரிடம் தெரிவிப்பதாக கூறிச் சென்றிருந்தார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் சிலரும் மக்களோடு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment