திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை; உயர் நீதிமன்ற கிளையில் மனு!

215 0

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 28ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அ.ம.மு.க. வேட்பாளராக எஸ்.காமராஜ் அறிவிக்கப்பட்டு இருந்தார்.
இதற்கு மத்தியில், திருவாரூரில் இன்னும் புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இதில், அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை. தேர்தலை ரத்து செய்ய மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதற்கான ஒப்புதல் பெற வேண்டும்.  இந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்த விதம் சட்டவிரோதம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

Leave a comment