கதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது!

218 0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவரைக் கைது செய்யுதுள்ளதாக அதிகாரிகள் ஜேர்மன் காவற்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தென்மேற்கு ஜேர்மன் பகுதியில் வசித்து வந்த 39 வயதுடைய நவநீதன் என்பவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் பின் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நபர் தொடர்பான விபரங்களை, தமது தனியுரிமை சட்டங்கள் காரணமாக வெளியிடாத அந்நாட்டு அதிகாரிகள், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் அங்கத்தவர் என்றும் கொலை மற்றும் கொலை எத்தனிப்பு சம்பவங்களுடனும் அவர் தொடர்புடையவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வெளியுறவு அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் 2005 ஓகஸ்ட்டில் கொல்லப்பட்டமை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக ஜேர்மனின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment