தமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை!

408 0

தமிழர்களின் இறையாண்மையை  மீண்டும்  பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை!!!
-அனைத்துலக ஈழத்தமிர் மக்களவை-

தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2050 ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை நிர்ணயிக்கும் ஆண்டாக மலரவேண்டும். தமிழர்களின் இன்னல்கள் அகன்று தமிழர் தலைநிர்ந்து வாழும் வளமான ஆண்டாக மலரட்டும் இத் தைத்திருநாள். இயற்கைக்கும் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் உயரிய பண்புடைய தமிழர்களின் தொல் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அடையாளப்படுத்தும் இப்பண்டிகையை தமிழர்கள் சுயமரியாதையுடன் கொண்டாட வழிபிறக்கட்டும்.
மானிட வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மானம், உயிர் மற்றும் காலம் ஆகிய இம்மூன்று விடையங்களும் ஆகும்.

மானம்:
காலங்காலமாகக் இனவழிப்பு யுத்தங்களின்  ஊடாகவும் சிங்கள பௌத்த மயமாக்கலூடாகவும் ஈழத்தமிழர்களை  அழித்து  வந்த சிங்கள தேசத்தைக் கதிகலங்கவைத்துத் தமிழரையும், தமிழர் நிலப்பரப்பையும் காத்தது எமது தேசிய விடுதலைப்போராட்டம்.

உயிர்:
தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமையை அடைய தங்களின் விலைமதிப்பற்ற இன்னுயிர்களை ஈகம் செய்து தமிழர் இருப்பைப் பாதுகாத்தனர் மாவீரர்கள்.

காலம்:
2009ம் ஆண்டு நடைபெற்ற தமிழின அழிப்பின் பின்னர் ஆயுதப்போராட்டத்தின் மௌனிப்போடு   தமிழீழத் தேசியப் போராட்டமானது தமிழ் அரசியற்கட்சிகளின் கைகளில் சிக்கித் தவிக்கின்றது. அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் தைத்திருநாள் அறைகூவலானது உடனடியாக மீளப்பெறமுடியாத காலத்தை இழுத்தடிப்புச் செய்து கரையவிடாது  அனைத்துத் தமிழ்த் தேசிய தரப்புகளும் தமிழ்த்தேசியத்தைக் காக்க தாயகத்திலும் புலத்திலும் ஒன்றிணைந்த அரசியற் செயற்பாட்டில் ஈடுபடுவது சமகாலத்தின் கட்டாய கடமையாக அமைகின்றது.

“உலகத்தில் பழமைவாய்ந்த  பாரம்பரியத்தை கொண்ட தமிழ் மக்களை, ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும்,தமிழர்களுடைய தனித்துவமான இறைமை, தமிழர் நிலம், தமிழ் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம், தமிழர் அடையாளங்கள்  பாதுக்காக்கப்  படவேண்டும், இவ் உயரிய பணியை திருவள்ளுவர் ஆண்டு 2050இல் தமிழர்கள் ஆகிய நாம் ஒன்றிணைந்து பலமான தரப்பாக எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்போம் என எமக்காக தம்மை அர்ப்பணித்த  மாவீரர்கள் மற்றும் மக்கள் மீதும் உறுதியெடுத்துக் கொள்வோமாக.

உலகமெல்லாம் பரந்து வாழும் அனைத்து தமிழர்களுக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பில் தமிழ் புத்தாண்டு  மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.



தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Leave a comment