பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரர் கைது- சமூக வலைத்தளம் மூலம் தகவல் பரிமாற்றம்

256 0

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்புடன் சமூக வலைத்தளம் வாயிலாக தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது நடவடிக்கைகளை புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தொடர்ந்து உளவு பார்க்கத் தொடங்கினர். சுமார் நான்கு மாத காலம் நடைபெற்ற கண்காணிப்பைத் தொடர்ந்து, தற்போது அந்த வீரரை, ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அந்த வீரர், சமூக வலைத்தளம் மூலம் இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை ஐஎஸ்ஐ அமைப்புடன் பரிமாறியது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ வீரர் தொடர்பான தகவல்கள் மற்றும் விசாரணைக்கு தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ராணுவம் வழங்கி வருவதாக கூறினார். 

இதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நொய்டாவில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர், அக்டோபர் மாதம் மீரட்டில் ஒரு வீரர் மற்றும் நவம்பர் மாதம் பெரோஸ்பூரில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து தகவல் பரிமாற்ற சாதனங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Leave a comment