தண்டாரம்பட்டு அருகே 3 மாத குழந்தையை துண்டு, துண்டாக வெட்டி கொன்ற தந்தை

291 0

தண்டாரம்பட்டு அருகே பெற்ற குழந்தையை தாயின் கண் முன்னே, துண்டு துண்டாக வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). பங்க் கடை வைத்துள்ளார். இவருக்கும், ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் கார்த்திகேயன், அவரது தந்தை தனபால், ராஜேஸ்வரி மற்றும் குழந்தைகள் என அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென அரிவாளால் வெட்டுவது போல் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்ட ராஜேஸ்வரி எழுந்து பார்த்தார். அங்கு கார்த்திகேயன் குழந்தையை கத்தியால் துண்டு, துண்டாக வெட்டிக் கொண்டிருந்தார்.

இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். குழந்தை துண்டுதுண்டாக வெட்டி இறந்து கிடந்ததை பார்த்து திகைத்தனர்.

இதுகுறித்து வானாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. ஹேமசித்ரா, தண்டாரம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

குழந்தையின் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.

இருப்பினும் குழந்தை வெட்டிக் கொலை செய்யப்படுவதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment