ஒடிசாவில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி!

288 0

ஒடிசாவில் மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மாவட்டத்தில் உள்ள ஹசினா மற்றும் கண்ட்கிபூர் கிராமங்களில் இருந்து சுமார் 19 குடும்பத்தினர் புத்தாண்டை கொண்டாட ஹுகிடோலா தீவுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். அவர்கள் சென்ற படகில் 6 ஆன்கள், 27 பெண்கள் மற்றும் 22 குழந்தைகள் பயணம் செய்தனர்.

மகாநதி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு நிலைதடுமாறியது. இதில்  படகு நிலை தடுமாறி ஆற்றில் கவிழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும்  நீரில் மூழ்கினர்.

தகவலறிந்து கடலோர காவல் படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் உள்ளூர் மீனவர்களும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 45 பேரை உயிருடன் மீட்டனர். 

இந்நிலையில், இன்று அதிகாலை ஆற்றில் இருந்து 9 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும், காணாமல் போன ஒருவரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
படகு விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்தார். விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றார்.

Leave a comment