வீதியில் பயணித்த இளைஞர் ஒருவரை இரு இளைஞர்கள் வாளினால் வெட்டி காயப்படுத்தியதுடன் வீதியால் சென்ற மற்றுமொரு வயோதிபர் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
யாழ். மூளாய் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூளாய் – மாவடி வீதியல் சென்ற இளைஞர் ஒருவரை இரு இளைஞர்கள் வழி மறித்து வாளினால் வெட்டியுள்ளனர். அதன் போது வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன், வாள் வெட்டினை மேற்கொண்ட இளைஞர்களுடன் போராடி அவர்களின் வாளினை பறித்தெடுத்துள்ளார்.
அதனால் தாக்குதல் மேற்கொண்ட இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் இருவரும் தப்பி செல்லும் போது வீதியால் வந்த வயோதிபரையும் தாக்கி விட்டு தப்பி சென்றனர்.
குறித்த சம்பவத்தில் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் தன்னால் தாக்குதலாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வாளினை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து முறைப்பாடு பதிவு செய்தார். அதேவேளை தாக்குதலுக்கு இலக்கான வயோதிபரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.