குன்னூர் ஏல மையத்தில் ரூ.15 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை!

327 0

குன்னூர் ஏல மையத்தில் ரூ.15 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை செய்யப்பட்டது.

மலைப்பிரதேசமான நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகளும்,

தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. நீலகிரி மாவட்ட அனைத்து தேயிலை தொழிற்சாலைகளிலும் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது.

இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு ஏலம் எடுக்கின்றனர். இந்த ஏலத்தில் தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

குன்னூர் ஏல மையத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலைத்தூள் ஏலம் விடப்படுகிறது. அதன்படி 51-வது ஏலம் கடந்த 20, 21-ந் தேதிகளில் நடைபெற்றது.
இந்த ஏலத்துக்கு 19 லட்சத்து 71 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. அதில் 12 லட்சத்து 71 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 7 லட்சம் டஸ்ட் ரகமாவும் இருந்தது.

ஏலத்தில் 15 லட்சத்து 56 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் ரொக்க மதிப்பு ரூ.15 கோடியே 9 லட்சம் ஆகும். இது 80 சதவீத விற்பனை ஆகும். சி.டி.சி. தேயிலைத்தூளின் உயர்ந்தபட்ச விலை கிலோவுக்கு ரூ.235, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் உயர்ந்தபட்ச விலை கிலோவுக்கு ரூ.236 என இருந்தது.


சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.80 முதல் ரூ.88 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.112 முதல் ரூ.120 வரையும் ஏலம் சென்றது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.82 முதல் ரூ.90 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.118 முதல் ரூ.124 வரையும் விற்பனையானது.

இதுவே இந்த ஆண்டின் கடைசி ஏலம் ஆகும். அடுத்த ஆண்டிற்கான முதல் ஏலம் வருகிற 3, 4-ந் தேதிகளில் நடக்கிறது. அந்த ஏலத்துக்கு 17 லட்சத்து 82 கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment