இறுதி யுத்தத்தில் க்ளாஸ்டர் குண்டுகளின் பயன்படுத்தப்பட்டது- ஊடகவியலாளர் சுரேன்

14834 0

suren-karthikesuஇலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை படையினரால கிளாஸ்டார் குண்டுகளை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில், த கார்டியன் எனும் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியிலும் இந்த விடயத்தினை வலியுறுத்தி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளனர்.

எனினும், இறுதி யுத்தத்தில் க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை நேரில் பார்த்து அதன் பாதிப்புகை உணர்ந்த தமிழர் தரப்பினர் முன்வந்து சாட்சியமளிப்பது அவசியமாகின்றது.

சவால் நிறைந்த அந்தக் கடமையினையும், செய்வதற்கு கனடாவில் வசிக்கும் சுரேன் கார்த்திகேசு என்பவர் முன்வந்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுரேன் ஒரு ஊடகவியலாளர் ஆவார்.

இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் வாழ்விடங்கள் மீது வீசப்பட்ட க்ளாஸ்டர் குண்டுகள் தொடர்பிலான செய்தி அறிக்கையிடலை சுரேன் முன்னெடுத்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், “அண்டைக்கு 29ஆம் திகதி நவம்பர் மாசம் 2008 ஆம் ஆண்டு.

அதிகாலம 1.35 மணியிருக்கும். சனங்கள் அந்த நேரத்திலயும் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருக்குதுகள். எங்கட வீடு விசுவமடுவில இருந்தது.

நான் வீட்ட படுத்திருந்தனான். அந்த நேரம் திடீர் எண்டு வந்த மிக் விமானங்கள் எனக்கு நேர முன்னுக்கு சில மைல்கள் தொலைவில் குண்டு போட்ட சத்தம் கேட்டது.

திடீரெண்டு பெரிய குண்டுச்சத்தம் கேட்க வீட்டில் எல்லாரும் எழும்பிற்றினம். மிக் விமானங்களின் சத்தம் அப்பிடி. வெளிச்சக்குண்டுகளை வீசினாதால தருமபுரம், விசுமவடு எல்லாம் பகல் போல் காட்சி அளிச்சது.

விமானங்கள் மிக கிட்டத்தில எங்கயோதான் குண்டுகள் போடுது எண்டத என்னால் ஊகிக்க முடிஞ்சது.

அந்தளவுக்கு விமானங்களின் இரைச்சல் ஒருவித பயத்த எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. பயம் இருந்தாலும் என்ர பணியைச் செய்யவேணும் எண்டு நினைச்சிக்கொண்டு மோட்டர் சயிக்கிளில விசுவமடுவில் இருந்து சுண்டுக்குளம் சந்தி நோக்கிப் போனன்.

நான் போற திசையிலயே விமானங்கள் தாக்குதல்கள் நடத்துவது எனக்குத் தெரிஞ்சது. அதுமட்டுமல்லாம, தாக்குதல் நடக்கிற இடம், இடம்பெயர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்து வாற முகாம்.

இந்தத் தாக்குதலில சனங்களுக்குத்தான் அதிக பாதிப்புக்கள் வந்திருக்கும் என்றே என்ர மனம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த இருட்டு நேரத்தில எவ்வளவு தூரத்தில் தாக்குதல் நடக்குது எண்டு எனக்குத் தெரியேல்ல.

ரெண்டாவது முறை குண்டுத் தாக்குதல் நடக்கேக்க நான் சுண்டிக்குளம் சந்திக்குப் போயிற்றன். றோட்டில ஒரு சனம் கூட இல்லை.

இந்தத் தாக்குதலில யாரும் காயப்பட்டிருந்தால் கிளிநொச்சி, தருமபுரம் ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு வரவேணும். எனவே நான் தருமபுரம் ஆஸ்பத்திரிக்குப் போனன்.

ஆனால் அங்க காயப்பட்டவங்கள் யாரும் வரேல்ல எண்டு ஆஸ்பத்திரில வேலை செய்த ஆக்கள் எனக்கு சொல்லிச்சினம்.

அவையளும் ஆஸ்பத்திரி வாசலிலதான் நிற்கினம். நான் திரும்பி சுண்டிக்குளம் சந்தியால் கல்லாறு பக்கமா என்ர மோட்டர் சயிக்கிள்ல போய்க்கொண்டிருந்தன்.

அந்த நேரம் பார்த்து மோட்டர் சயிக்கிளுக்கு மண்ணெண்ணெய் முடிஞ்சுது. அப்பிடியே நிண்டிட்டுது. அந்த நேரத்தில யாரிட்ட உதவி கேட்கிறது..? உதவி செய்யிற மனமிருந்தாலும், மருந்துக்கு கூட மண்ணெண்ணெய் யாரிட்டயும் இருக்கேல்ல.

மோட்டார் சயிக்கிள சரிச்சா கொஞ்சத்தூரம் ஓடலாம். நான் யோசிச்சிக்கொண்டு நிற்க, இன்னொரு மோட்டர் சயிக்கிள் தாக்குதல் நடந்த பக்கமிருந்து வேகமா வந்தது.

அந்த மோட்டார் சயிக்கிளில பின்னுக்கு இருந்தவர் கத்தி அழுதுகொண்டு போனார். நான் உடன அவயள பின்தொடர்ந்து போய், ”அண்ணை எங்க கிபிர் அடிச்சது? காயப்பட்ட ஆக்கள் இருக்கினமோ” என்று கேட்டன்.

” எனக்கு தெரியேல்லை. ஆனா நிறைய சனம் கத்துற சத்தம் மட்டும் கேட்குது”. அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சது காயப்பட்டு, றோட்டால ஓடிவந்த ஒராளைத்தான் அந்த மோட்டர் சயிக்கிளில ஏத்திக்கொண்டு வாறார் எண்டு.

உடன ஆஸ்பத்திரிக்குப் போனால் காயமடைஞ்ச ஆக்களின்ர முழுவிபத்தையும் எடுக்கலாம் எண்டு யோசிச்சி, அங்க போனன்.

“எனக்குப் பெரிய காயம் இல்லை. ஆனால் முகாமுக்குள்ள தான் குண்டுகள் விழுந்தது. அதில் நிறைய பேர் எங்க ஓடினாங்கள் எண்டும் தெரியாது.

முகாமை சுற்றி வாய்க்கால் இருக்கு. கழுத்தளவு தண்ணிக்குள்ளால வரமுடியாமல் காயமடைஞ்ச ஆக்கள் அங்க இருக்கினம்.

நான் ஒருமாதிரி தப்பியோடி றோட்டுக்கு வந்தே, இந்த மோட்டார் சயிக்கிளில ஆஸ்பத்திரிக்கு வந்தன்” என்றார் கத்திக்கொண்டு வந்தவர்.

நான் நினைக்கிறன், இந்தளவு நிகழ்வும் விமானங்கள் சென்று 15 நிமிடங்களுக்கும் நடந்திருக்கும்.அதுக்குப் பிறகுதான் ரெண்டு அம்புலன்ஸ் அனுப்பி காயப்பட்ட ஆக்கள ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தது.

க்ளாஸ்டர் குண்டுவீச்சில் காயப்பட்டவர்களை தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்றனர்

இரவு எங்களால மிக் அடிச்ச இடத்துக்குப் போக முடியேல்ல. நானும் லோகீசனும் ( இறுதிப் போர் வேளையில் பணியாற்றிய இன்னொரு பத்திரிகையாளர்) காலமதான் கல்லாறு பகுதிக்கு போனம்.

அது உழவனூர் எண்டுற கிராமமத்தின்ர பின்பகுதி. அதுக்கு அடுத்த கல்லாறு கிராமம். இடம்பெயர்ந்த ஆக்களுக்கு அப்பத்தான் வீடுகள் கட்டிக் குடுத்திருக்கினம்.

சில ஆக்கள் கட்டிக்கொண்டிருக்கினம். அதுக்குள்ள தான் மிக் குண்டு போட்டது. சில குண்டுகள் வெடிச்சாலும் அதின்ர பகுதிகள் சிதிறிப் போய் கிடந்தது.

அதில ஒரு குண்டு கொட்டிலுக்கு முன்னால நிலத்துக்குள்ள அரைவாசி இறங்கியிருந்தது. மற்றது சிதறியிருந்தது.

அதை நாங்கள் போட்டோ எடுக்கேக்கத்தான். அந்த இடத்தில் நிண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்களை சேர்ந்த போராளிகள், “இதுதான் க்ளாஸ்டர் குண்டு எண்டாங்கள்.

இது சண்டைகளில பயன்படுத்த தடை” எண்டும் சொல்லிக் கொண்டிருந்தாங்கள். 2008 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி டப்ளினில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் இராஜதந்திரிகள், க்ளாஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள்.

அன்றிலிருந்து போர்களில் க்ளாஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவது போரியல் விதிமுறைகளை மீறும் செயலாகக் கருதப்பட்டு வருகின்றது.

அத்துடன் தடைசெய்யப்பட்ட க்ளாஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவது போர்க்குற்றமாகவும் கொள்ளப்படுகின்றது.

அதுக்குப் பிறகு விமானத் தாக்குதல்கள் நடக்கிற இடங்களில செய்தி சேகரிக்கப் போகேக்க அவதானமா இருந்தம். முள்ளிவாய்க்காலிலயும் இதேமாதிரியான க்ளாஸ்டர் குண்டுகள் வீசப்பட்டது.

“2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாசம். இரணைப்பாலைக்கும் மாத்தளனுக்கும் இடைப்பட்ட ஒரு இடத்தில நிலத்தில வச்சித்தான் பேப்பர் அடிச்சிக்கொண்டிருந்தம்.

சரத்த நிலத்துக்கு விரிச்சிற்று அதுக்கு மேல கொம்பியூட்டர வச்சித்தான் வேலை செய்வம். அந்த நேரம் நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில இருந்து 300 மீற்றர் தூரத்துத்துக்கு அங்கால ஷெல்லுகள் விழுந்து வெடிக்கத் தொடங்கினது.

அந்தப் பக்கம் திரும்பி பார்த்தன். வானத்திலயே அந்த ஷெல் வெடிக்குது. அது பிறகு சின்னஞ்சின்னதா சிதறி, அந்த சிதறல்கள் எல்லாம் நிலத்தில விழுந்து பரவலா வெடிக்குது.

அது ஷெல்லில அடிக்கிற க்ளாஸ்டர் குண்டு வகையை சேர்ந்தது எண்டு சொல்லிச்சினம். தமிழர் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலைதான் என்பதை நிரூபிக்க வெளிநாட்டு ஊடகங்களும், ஆய்வுக் கட்டுரைகளும் மட்டுமே போதாது.

இதனை கொண்டு பார்க்கும் போது ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு போல இன அழிப்பை நேரில் பார்த்த பலரும் சாட்சியங்களாக மாறவேண்டியது கட்டாயம் என்பதை எடுத்துகாட்டுகின்றது.

Leave a comment