தாம்பரத்தில் சொத்து தகராறில் பஸ்சில் மூதாட்டி வெட்டிக்கொலை!

220 0

தாம்பரத்தில் பஸ்சில் வைத்து மூதாட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது படுகாயம் அடைந்த மகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காயரம்பேடு கிராமம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 53). காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் முத்தம்மாள். தேவராஜுக்கு 3 சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர். முத்தம்மாளுக்கு அதே பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.


முத்தம்மாளை சரியாக கவனிக்காததால் தேவராஜுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தேவராஜ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராகிவிட்டு முத்தம்மாளும், அவரது மகள் விஜயலட்சுமியும் நேற்று இரவு 7 மணி அளவில் தாம்பரம் பஸ் நிலையம் வந்தனர்.

பின்னர் குன்றத்தூர் அருகே உள்ள கோவூருக்கு செல்வதற்காக மாநகர பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர். அப்போது அந்த பஸ்சில் ஏறிய தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்தம்மாளையும், விஜயலட்சுமியையும் சரமாரியாக வெட்டினார்.

இதில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த விஜயலட்சுமி சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையத்தில் சொத்துக்காக தனது தாயை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a comment