மஹிந்தவை நியமிக்காவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும்! – எஸ்.பி

289 0

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்த்து வழங்கப்படாவிட்டால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படக் கூடுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘நாளைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வது பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்து வகிக்கக்கூடிய பெரும்பான்மை எம்மிடமே காணப்படுகின்றது. அத்தோடு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்கக்கூடிய தகுதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே காணப்படுகின்றது.

இது தொடர்பில் சபாநாயகர் கருஜய சூரியவுக்கு அறிவிக்கவுள்ளோம். அவர் எமது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவார் என நாம் எதிர்பார்கின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது என தீர்மானித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மஹிந்தராஜபக்ஷவை பிரதமராக நியமித்திருந்தார்.

எனினும் அது தவறு என்ற ரீதியில் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். எனினும் தற்போதுள்ள பெரும்பான்மையின் படி எமக்கே எதிர்க்கட்சி ஆசனமும் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இது வரை காலமும் செயற்பட்டிருந்த போதும், அவர்கள் எதனையுமே செய்ததில்லை. மாறாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு வரவு – செலவு திட்டத்திற்கும் ஆதரவளித்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment