போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் – விக்கி

291 0

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வாரம் ஒரு கேள்வி பதில் பகுதிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

” போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தை ஏற்கனவே ஜனாதிபதியுடன் சேர்ந்து பலரும் கூறிவிட்டார்கள். ‘எமது படையினர் தவறேதும் செய்யவில்லை. அவர்கள் எந்த வித நீதிமுறைத் தண்டனைக்கும் உள்ளாவதற்கு நாங்கள் விடமாட்டோம்’ என்று ஜனாதிபதியே கூறியுள்ளார்.

அதன் அர்த்தம் என்ன? ‘எமது படையினர்’ என்பதைக் கவனிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் பலர் படையினருள் உள்ளார்கள். விசாரணைகள் ஏதும் செய்தறியாமலே அவர்கள் தவறேதும் செய்யவில்லை என்று கூறுவதற்குக் காரணம், அவர்கள் ‘எமது படையினர்’ என்பதால் தப்பேதும் செய்திருக்க மாட்டார்கள் என்பதே.

இது தான் ஜனாதிபதியின் வாதம். ‘எமது படையினர்’ இவ்வாறான மனோநிலை கொண்ட அரசாங்கத்தினர் இருக்கும் போது அவ்வாறான அரசாங்கத்தினரைத் தமது தொழில் புரியும் காலத்தில் காப்பாற்றி வந்த நீதியரசர்களைக் கொண்ட உச்ச நீதிமன்றமோ வேறேதேனும் சிறப்பு நீதிமன்றங்களோ நீதியை நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கமுடியாது.

ஆகவே சிங்கள அரசியல்வாதிகளிடையே ஜனநாயகம் பற்றிய பிணக்கு, அரசியல் யாப்பு பற்றிய பிணக்கு எழும்போது நீதியுடன் நடந்து கொள்ளும் நீதியரசர்கள் அல்லது நீதிபதிகள் இனரீதியான அல்லது தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்கள் எழும் போது அல்லது ‘எமது படையினர்’ பற்றி எழும் போது நீதியை நிலைநாட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

அவர்களின் பின்னணி அதற்கு இடங்கொடுக்காது. ஆகவே யுத்த குற்றங்கள் சம்பந்தமாக நியாயத்தை எதிர்பார்த்தால் வெளிநாட்டு சட்டத்துறை அல்லது நீதித்துறை உள்நுழைவுகள் அவசியமே” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment