முன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது-சிவஞானம்

303 0

முன்னாள் போராளிகளை விசாரணை  என்ற பெயரில் 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கதக்கது  இவ்வாறன செயற்பாடுகளை உடனடியாக அரசாங்கம்  நிறுத்தவேண்டுமென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

ஜனநாயக் போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி என்பவரை விசாரணைக்காக 4 ஆம் மாடிக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளமை தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசியை நாளை மீண்டும் ஒருமுறை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்புப்பிரிவு கோரியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக போராளிகள் கட்சி ஆரம்பிக்கப்பட முன்னரும் அதற்குப் பின்னரும் விசாரனைக்கு உட்பட்டவர்.அண்மைக் காலத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் வேந்தன் மற்றும் அதன் தலைவர் கதிர் ஆகியோரும் பயங்கரவாத தடைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்பட்டிருக்கின்றனர்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் மூன்று பிரதானிகளையும் குறிவைத்து விசாரணைக்குட்படுத்துவது அவர்களை அச்சுறுத்தி,அவர்களது ஜனநாயக நீரோட்ட இணைவை இல்லாதொழிப்பதை நோக்கமாக கொண்டதாகவே பார்க்கப்படவேண்டும்.

இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் போராளிகளாக இருந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தமது கட்சியை ஆரம்பித்து வெளிப்படையாக செயல்படுகின்றவர்கள். இக் கட்சியின் உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் ஆவர்.

இவர்களை இப்படி அச்சுறுத்துவது அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புதலை தடுக்கும் செயற்பாடாகவே காணப்படுகின்றது.

தொடர்தும் முன்னாள் போராளிகளை விசாரணை  என்ற பெயரில் நான்காம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கதக்கது. உடனடியாக அரசாங்கம் இவ்வாறன செயற்பாடுகளை நிறுத்தவேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.

Leave a comment