8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு

255 0

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மாவட்டங்களில், சுமார் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. நிலஆர்ஜிதம் செய்வதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இத்திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும், திட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரியும் தர்மபுரியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட அமர்வு, கடந்த ஜூலை மாதம் முதல் விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் சார்பில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956-ன் படி, திட்டத்திற்கான ஆரம்பகட்ட ஏரியல் சர்வே அடிப்படையிலேயே 3-ஏ என்ற அந்த அறிவிப்பாணைகள், கடந்த மே 10, 23, ஜூன் 1, 11, 21 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 8 வழி சாலை அமையும் இடங்களில், பொதுமக்கள் நலன் கருதி மாற்றியமைக்கப்பட்டது. இதனால், பல வீடுகள் இடிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. 3-ஏ பிரிவின் கீழ் வெளியிடப்படும் அறிவிப்பாணை என்பது, திட்டத்தை எங்கு செயல்படுத்த விரும்புகிறோம் என்ற விவரங்களை வெளியிடுவது தான். இந்த அறிவிப்பு என்பது, திட்டத்துக்கான நிலத்தை அதிகாரிகள் பார்வையிடவும், அளவிடவும் மட்டும்தானே தவிர, நிலத்தின் மீதான உரிமை எல்லாம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு வழங்குவதற்காக இல்லை.

மேலும், தீர்த்தமலை வனப்பகுதிக்குள் சாலை அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. புதிய அறிவிப்பாணையின்படி, தீர்த்தமலை வனப்பகுதியில் வெளிப்பகுதியை சுற்றி சாலை செல்வதுபோல திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 4-ந் தேதி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, பிரிவு-3 டி-யின் கீழ் அறிவிப்பணையை வெளியிடவில்லை. இந்த பிரிவின் கீழ் அறிவிப்பாணை வெளியிடாத பட்சத்தில், நிலத்தின் உரிமையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை என்ற பேச்சே எழவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதங்களும் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்கள் ஏதாவது தாக்கல் செய்ய விரும்பினால், இருதரப்பு வக்கீல்களும் வருகிற ஜனவரி 4-ந் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Leave a comment