ஆளுநர் உத்தரவிட்டும் வவுனியா பழைய பஸ் நிலையம் இயங்கவில்லை

321 0

வடமாகாண ஆளுநரின் உத்தரவிற்கு அமைய மீளத்திறக்கப்பட்ட வவுனியா பழைய பஸ் நிலையம் செயற்படவில்லையென பயணிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் உத்தரவிற்கு அமைய பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்வதற்கு பல்வேறு தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் திகதியிலிருந்து பஸ் நிலையம் மீளத்திறக்கப்பட்டபோதும் பஸ்கள் இ.போ.ச மற்றும் தனியார் தமது சேவைகளை திறம்பட மேற்கொள்ளவில்லை.

வடமாகாண ஆளுநரின் கலந்துரையாடலின்போது ஒரு முடிவு எடுக்கப்பட்ட நிலையிலும் வடமாகாண ஆளுநர் உத்தரவிற்கு அமையவும் பஸ் நிலையத்தில் இரு சேவைகளும் இடம்பெறவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்தினை  எதிர்நோக்கியுள்ளனர். இவ்விடயத்தில் தனியார் பஸ் சங்கம் மற்றும் இ.போ.ச சாலையினர் தமது குறுகிய சுயலாபத்திற்காகவே செயற்பட்டுவருகின்றார்கள்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான சேவையை மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்திவருகின்றனர். இவ்வாறு மக்களுக்குத் தடை ஏற்படுத்தி வருபவர்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்று பயணிகள் பலர் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து பழைய பஸ் நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிடம் வினவிய போது பழைய பஸ் நிலையம் திரும்பவும் செயற்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து நாங்கள் மிகவும் மகிழ்யடைந்திருந்தோம்.

எனினும் அதன் பிறகு இடம்பெற்ற செயற்பாடுகள் எமக்கு திருப்தி அளிக்கவில்லை. இவ்விடயத்தில் தொடர்புபட்ட அதிகாரிகள், பொலிஸார் இதற்கு சரியான ஒரு நடவடிக்கை மேற்கொண்டு இருசேவைகளும் இணைந்து மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.

Leave a comment