அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினையில்லை-பந்துல குணவர்த்தன

247 0

இந்த மாதம் 30ஆம் திகதி வரை பிரச்சனைகள் இன்றி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ​நேற்று (06) ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அவர், இதேபோன்று உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கும் மக்களுக்கு ஏனைய நிவாரணங்களை வழங்குவதற்கும் முடியும் என்றும் கூறினார்.

அரசியல் குழப்ப நிலை காரணமாக அரச சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது முறையற்றதாகும் என்றும் தெரிவித்தார்.

19ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிக்க முற்பட்டு அதன் அதிகாரம் குறைவடைந்திருப்பதாக இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கச் சென்று அவரின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதன் விளைவுகளை தற்போது காண முடிகிறது.

அரசியல் அமைப்பில் பகுதியளவிலான சீர்திருத்தம் செய்வதை நிறுத்திவிட்டு, அதனை முழுமையாக சீர்திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரச பணியாளர்களை அச்சுறுத்தி அரச இயந்திரத்தை சீர்குலைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன இதன் போது சுட்டிக்காட்டினார்.

Leave a comment