மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

358 0

மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பு இன்று (21) மாலை 2.30 மணியளவில் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பு மன்னார் நகர சபையின் கணக்காளர் தி.றோய் யூலியஸ் அவர்களினால் முன் வைக்கப்பட்டது.

இதன் போது நகர சபையின் செயலாளர், உப தலைவர், உறுப்பினர்கள் முன்னிலையில் வாசிப்பு இடம் பெற்றது.

இதன் போது வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், இதர ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டு சபை உறுப்பினர்கள் அனைவரினதும் முழு ஒத்துழைப்போடும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் வரவு செலவு திட்டத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான மொத்த வருமானமாக 149 மில்லியன் 6 இலட்சத்து 28 ஆயிரத்து 550 ரூபாவும், மொத்தச் செலவீனமாக 149 மில்லியன் 6 இலட்சத்து 26 ஆயிரத்து 585 ரூபாவும், மிகையாக ஆயிரத்து 964 ரூபாய் 20 சதம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சபையில் உள்ள உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித எதிர்ப்புக்களும் இன்றி குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏகமனதான நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வகையில் சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

Leave a comment