நாட்டிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் தத்தமது கட்சி உறுப்பினர்களை சரியாக வழிநடத்துவார்களானால் நாளைய பாராளுமன்ற அமர்வு வெற்றிகரமானதாக அமைவதுடன் நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அத்துடன் ஜனநாயகத்தை பாதுகாப்பதைத் தவிர, யாரையும் காப்பாற்றுவதற்காகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ நாம் அரசாங்கத்திலிருந்த விலகவில்லை.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் விரைவில் எம்முடன் இணைவர்கள். அதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளதாக தெரிவித்து, அது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.