தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதியின் உரை எவ்விதத்திலும் தீர்வாக அமையாது  -பிமல் ரத்னாயக

196 0

பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிம்மாசன பிரசங்கத்தினை நாட்டு மக்களும் , சர்வதேசமும் எதிர்பார்க்கவில்லை.

தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதியின் உரை எவ்விதத்திலும் தீர்வாக அமையாது  என  மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை நிரூபித்து அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து ஜனாதிபதி மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க காலவகாசத்தினை ஏற்படுத்த முயற்சித்தால் பாரிய மக்கள் போராட்டம் நிலையற்ற அரசாங்கத்திற்கு எதிராக தோற்றம் பெறும் எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னயிணின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு   குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

தங்களுக்கு பெரும்பான்மை பலம் காணப்படுகின்றது என்று குறிப்பிடுபவர்களே பாராளுமன்றத்திற்கு வர அஞ்சுகின்றனர்.

மஹிந்த தரப்பினரால் ஒரு போதும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை வெளிப்படுத்த முடியாது.   19 நாட்களாக  பாராளுமன்றத்தினை  ஒத்திவைத்து பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சம்பவங்கள்  கடந்த நாட்களில்  பகிரங்கமாக இடம் பெற்றது.

இடைப்பட்ட காலத்தில் ஆட்சேர்ப்பு போதாமையின் காரணமாகவே மேலும் காலதாமதத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானது என்று  அரசாங்க தரப்பினர் அறியா விடினும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

பாராளுமன்றத்தினை கூட்டி அரசியலமைப்பினை  செயற்படுத்துங்கள்  என்றே  அனைவரும் குறிப்பிடுகின்றனர்.

ஒரு வேளை எதிர்வரும் புதன் கிழமை பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் சூழ்ச்சிகள் இடம் பெற்று  நியாயம் நிலைநாட்டப்படவில்லை எனின் பாராளுமன்றத்திற்கு வெளியில் பாரிய மக்கள் போராட்டம் தோற்றம் பெறும் என்றார்.

Leave a comment