நாட்டின் பொருளாதாரத்தினை மழுங்கடிக்கும் சூழ்ச்சிகளை விடுத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் ரணில் விக்ரமசிங்க விலகிக்கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தின் ஊடாக தங்களின் தேவைகளை நிறைவேற்றிகொள்ள முயற்சித்த நாடுகளே இன்று ஆட்சி மாற்றத்திற்கு எதிராக செயற்படுகின்றனர்
மக்களின் விருப்பத்திற்கு அமையவே ஆட்சி மாற்றம் இடம் பெற்றுள்ளது. அரச சொத்தினை முறையற்ற விதத்தில் பாவித்துள்ளமை தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நடவடிக்கைகள் முடியும்.
பாராளுமன்றத்தில் ஒரு முடிவினை பெற்றதன் பின்னரே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பெரும்பான்மையினை பாராளுமன்றத்தில் 113 ஐக் காட்டிலும் 120 ஆக நிரூபிப்போம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள முக்கிய தரப்பினர்கள் எம்மிடம் தாமாகவே இணைந்துக் கொண்டனர். அவர்கள் கடந்த காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்ளைகளுக்கு அமைவாக செயற்பட்டவர்கள் என்ற ரீதியில் இணைந்துக் கொள்கின்றனர்.

