மெக்சிகோ நாட்டு எண்ணெய் கப்பலில் பயங்கர தீ விபத்து

291 0

மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான பெமெக்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆயிரக்கணக்கான பெட்ரோல் மற்றும் டீசல் பீப்பாய்கள் வெடித்து சிதறின.

மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான பெமெக்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆயிரக்கணக்கான பெட்ரோல் மற்றும் டீசல் பீப்பாய்கள் வெடித்து சிதறின.

மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான பெமெக்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த ’பர்கோஸ்’ என்ற எண்ணெய் கப்பல் நேற்று கோட்ஸாகோல்கோஸ் துறைமுகத்தில் இருந்து வெராகுருஸ் துறைமுகம் நோக்கி டீசல் மற்றும் பெட்ரோல் பீப்பாய்களை ஏற்றியபடி மெக்சிகோ வளைகுடா வழியாக சென்று கொண்டிருந்தது.

வெராகுருஸ் மாநிலத்தில் உள்ள போக்கா டெல் ரியோ கடலோரப் பகுதியை நெருங்கியபோது அந்த கப்பலில் திடீரென தீ பிடித்தது. கப்பலில் இருந்த பணியாளர்கள் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஆனால், அந்த கப்பலில் 70 ஆயிரம் பீப்பாய்களில் பெட்ரோலும், 80 ஆயிரம் பீப்பாய்களில் டீசலும் இருந்ததால் தீபிடித்த பீப்பாய்கள் வெடித்து சிதறியதால் கப்பலின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. அதில் இருந்த 31 பணியாளர்களும் அவசர உதவி படகுகள் மூலம் கப்பலில் இருந்து வெளியேறினர்.

தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு படகுகளில் உள்ள வீரர்கள் ’பர்கோஸ்’ எண்ணெய் கப்பலில் கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க போராடி வருவதாக மெக்சிகோ ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே, பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சரிவால் கடும் இழப்பை சந்தித்துவரும் பெமெக்ஸ் பெட்ரோலிய நிறுவனம், அடுத்தடுத்து ஏற்பட்ட சில விபத்துகளால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோலிய ரசாடன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

கடந்த 2012-ம் ஆண்டு வடக்கு மெக்சிகோவில் உள்ள இந்நிறுவனத்தின் இயற்கை எரிவாயு அலகில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேரும், 2013-ம் ஆண்டு பெமெக்ஸ் தலைமையகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 37 பேரும் பலியாகினர், கடந்த 2015-ம் ஆண்டு கேம்பச்சே வளைகுடா பகுதியில் உள்ள எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 780 மில்லியன் டாலர் அளவுக்கு பொருள் இழப்பை பெமெக்ஸ் நிறுவனம் சந்தித்தது.

இந்நிலையில், நேற்றைய எண்ணெய் கப்பல் தீவிபத்தில் பல மில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்நிறுவனம் மீண்டுமொரு மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.