மன்னார் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்ளப்படுவதால் மன்னார் பகுதி மீனவர்களை குறிப்பிட்ட சில தினங்களுக்கு குறித்த கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மன்னார் கடற்தொழில் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையைச் சுற்றியுள்ள பல கடற்பிராந்திங்களில் எண்ணெய்வள ஆய்வுகள் 26.10.2018 தொடக்கம் 04.11.2018 வரை இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக காலி, கழுத்துறை, கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய கடல் பரப்பில் இவ் எண்ணெய்வள ஆய்வு நடைபெற்று வருகின்றது.
இவ் எண்ணெய்வள ஆய்வுக்காக நான்கு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இக் காலக்கட்டத்தில் குறிப்பிடப்பட்ட இடங்களில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவர்களானால் இவர்களின் மீன்பிடி உபகரணங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது மன்னார் கடற்தொழில் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள முக்கிய அறிவித்தலின்படி மன்னார் மீனவர்கள் மன்னார் வடக்கு தெற்கு கடற்பிராந்தியத்தில் எதிர்வரும் 2.11.2018 அன்று காலை 7 மணி தொடக்கம் 3.11.2018 அன்று காலை 8 மணி வரை கரையிலிருந்து ஐந்து கடல் மைல் தூரத்துக்கு அப்பால் முற்றாக மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் இந் நாட்களில் முற்றாக கடற்தொழில் செய்வதை நிறுத்தினால் தங்கள் மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் பாதுகாக்கப்படும் எனவும் இதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கான சகல அறிவுறுத்தல்கள் ஒவ்வொரு மீனவ கிராம சங்கங்கள், மதத்தளங்கள் மற்றும் பொது அறிவித்தல் மூலம் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

