பிரான்சில் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

28486 0

இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி திரூவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட ஒக்ரோபர் மாதம் வீரகாவியமான மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான இவிரி சூர்சன் பகுதியில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – இவ்றி சூசெய்ன் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச் சுடரினை இவிரி சூர்சன் தமிழ்சங்கத் தலைவர் திரு. தவராசா அவர்கள் ஏற்றிவைத்தார்.

ஈகைச்சுடரினை திருகோணமலை வானடி காவல் நிலையத் தாக்குதலில் வீரகாவியமான கப்டன் பிரசாந்தின் சகோதரர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும்; சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.

அரங்க நிகழ்வுகளாக தமிழ்சோலை மாணவர்களின் நடனமும், விடுதலை கீதமும், கவிதையும் இடம்பெற்றது.
சிறப்பு உரையினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப் பொறுப்பாளர் திரு. சுரேஸ் ஆற்றினார். அவர் தனது உரையில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் தமிழர் தாயகத்தில் மேற்கொண்ட படுகொலைகள் குறித்தும் எமது சந்ததியினருக்கு இந்த வரலாறுகளை பெற்றோர் தெரியப்படுத்த வேண்டும் என்றும், தாயகத்தில் மீளமைக்கப்படும் மாவீரர் துயிலும் இல்லங்களின் மீளமைப்பிற்கு புலம் பெயர் மக்களின் பங்களிப்பு குறித்தும் தெரிவித்தார்.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

Leave a comment