பிரான்சில் லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகியோரின் 22 வது ஆண்டு வணக்க நிகழ்வு!

48026 0

பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவன ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.10.2018) இம் மாவீரர்களின் கல்லறை அமைந்துள்ள பந்தன் துயிலும் இல்லத்தில் இடம் பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச் சுடரினை லாக்கூர்நோவ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அ.புவனேஸ்வரராஜா அவர்கள் ஏற்றி வைத்தார்.
அக வணக்கத்தைத் தொடர்ந்து குறித்த மாவீரர்களின் கல்லறைகள் மீது தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.
கப்டன் கஜனின் சகோதரர்கள் மாவீர்களின் கல்லறைகளுக்கான ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்தனர்.

தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த தமிழ் உணர்வாளர் ,எழுத்தாளர் திரு.பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு ப.பாலசுந்தரம் அவர்களும் உரையாற்றினர்.

திரு பாலசுந்தரம் அவர்கள் தனதுரையின் போது தாயகத்தில் தற்போது மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப் பட்டு வருவது குறித்தும், கோப்பாய் மற்றும சாட்டி மாவீரர் துயிலும் இல்லங்களின் புனரமைப்பிற்கு பிரான்சு பணியகம் பொறுப்பேற்றுள்ளது என்பதையும் அதற்கு அனைவரின் ஒத்துழைப்புத் தேவை என்றும், லெப்.கேணல் நாதன் மற்றும் கப்படன் கஜன் இவர்களின் கல்லறை வணக்க நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களில் எமது அடுத்த சந்திகளும் தொடர்ந்து மேற்கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் ஒலித்து. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்துடன் வணக்க நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)