ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம்- சி.வி.சண்முகம் பேச்சு

218 0

ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம் என்று உளுந்தூர்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். 

உளுந்தூர்பேட்டையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி 2 ஆண்டு காலத்தை நிறைவு செய்ய போகிறது. ஜெயலலிதா 100 ஆண்டுகாலம் இந்த ஆட்சி இருக்கும் என்றார், அதை நனவாக்கி வருகிறோம். இன்று அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் கலகத்தை உருவாக்கி ஆட்சியை கலைக்க முயன்றனர் அது நடக்கவில்லை. நீதிமன்றம் மூலம் முயன்றனர் அதுவும் முடியவில்லை. தற்போது முறைகேடு நடக்கிறது என்று சொல்கிறார்கள். அதை சொல்வது யார் தி.மு.க., அதன் புதிய தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின்.
புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டிய விவகாரத்தில் விசாரணை கமிஷனை சந்திக்க ஏன் அச்சப்படுகிறீர்கள். சந்திக்க வேண்டியது தானே. ஏன் தடை வாங்குகிறீர்கள். நாங்கள் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஊழல் பற்றி பேச பா.ம.க.வினருக்கும் தகுதி இல்லை. அவர்கள் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி கொண்டு இருக்கிற அரசு இது. இந்த ஆட்சி 100 ஆண்டு காலம் இருக்கும். தொண்டர்களின் ரத்தத்தை நம்பி இந்த இயக்கம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்று அவர் பேசினார்.
முன்னதாக மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ஜெயலிலதா விட்டு சென்ற ஆட்சியை சிறந்த முறையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். இந்த இயக்கம், ஆட்சியை பற்றி பலர் பேசி வருகிறார்கள். நாம் தான் தமிழகத்தை ஆள போகிறோம் என்று உள்ளார் ஒரு கட்சியின் தலைவர். அவரது எண்ணம் பலிக்காது. எம்ஜி.ஆர். எந்த எண்ணத்தில் இந்த இயக்கத்தை தொடங்கினாரோ, அந்த வழியில் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தாரோ, அதே போன்று எடப்பாடி பழனிசாமி உள்ளார். விழுப்புரம் தெற்குமாவட்டம் எங்களது கோட்டை என்பதை நிரூபித்து உள்ளோம். எப்போதும் முதல்-அமைச்சரின் தலைமையின் கீழ் சிறப்பாக பணிசெய்வோம் என்று அவர் பேசினார்.

Leave a comment