அமைச்சரவை கூட்டத்தில் சிறிசேன- ரணில் கடும் வாக்குவாதம்

196 0

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இந்தியாவிடம் வழங்குவது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில்  அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பு துறைமுகத்தின்  கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி தொடர்பான யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளார்.

அமைச்சர் மகிந்த சமரசிங்க  கிழக்கு கொள்கலன் முனையத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையே அபிவிருத்தி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

எனினும் பிரதமரும்  சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவீரவும் குறிப்பிட்ட அபிவிருத்தி திட்டத்தினை இந்தியாவிடம் கையளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் பிரதமரின் கருத்தினால் சீற்றமடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடற்கரை துறைமுகம் இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கவேண்டும் என  தெரிவித்துள்ளார்.

துறைமுகங்களை கடல்பரப்பினை வெளிநாடொன்றிற்கு வழங்கினால் இலங்கை தனது இறைமையை இழக்கவேண்டியிருக்கும் எனவும்  சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவை சேர்ந்த நாடொன்றிற்கு வழங்கியமை குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ள சிறிசேன இது குறித்து இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையை  இலங்கை அபிவிருத்தி செய்வது குறித்து இந்திய பிரதமர் எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை நிராகரித்த பிரதமர் இந்தியாவிலிருந்தே பெருமளவு கொள்கலன்கள் இலங்கைக்கு வருகின்றன இதன் காரணமாகவே இந்தியாவின் உதவியுடன் அதனை அபிவிருத்தி செய்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி இதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment