தூத்துக்குயில் நடைபெற்ற வண்டிப் பந்தயம் – சீறிப் பாய்ந்த காளைகள்.. குதிரைகள்..!

312 0

தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் அ.தி.மு.க.,வின் 47வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி,  குதிரை வண்டிப் பந்தயங்கள் நடைபெற்றது. இதில் 66 ஜோடி மாடுகளும், 10 குதிரைகளும் பங்குபெற்றன. 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது பேட்மாநகரம் கிராமம். அ.தி.மு.க.,வின் 47-வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரைவண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி தவிர நெல்லை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டி, குதிரை வண்டிப் பந்தயத்தில் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில். பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டுவண்டி ஆகிய பந்தயமும், குதிரை வண்டிப் பந்தயமும் நடைபெற்றது. பந்தயத்தில் 66 ஜோடி மாடுகளும், 10 குதிரைகளும் பங்குபெற்றன.

மாட்டுவண்டி, குதிரைவண்டிப் பந்தயங்களை ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சண்முகநாதன் துவக்கி வைத்தார். பெரிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.30 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.20 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ10 ஆயிரம் வழங்கப்பட்டது.

பூஞ்சிட்டு மாட்டு வண்டிப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது. அதேபோல, குதிரைவண்டிப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.7 ஆயிரம் மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. சாலையில் சீறிப்பாய்ந்த மாடுகள், குதிரைகளை விசில் அடித்தும், ஆராவாரம் எழுப்பியும் இளைஞர்கள் உற்சாகப் படுத்தினர். மாட்டுவண்டி, குதிரை வண்டிப் பந்தயங்களைக் காண சாலையில் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று கண்டுகளித்தனர்.

Leave a comment