திருமணத்துக்கு முன்பு விபத்தில் இறந்த காதலன்: மணப்பெண் கோலத்தில் கல்லறைக்கு வந்த பெண்

309 0

திருமணத்துக்கு முன்பு விபத்தால் காதலன் இறந்ததால், நிச்சயிக்கப்பட்ட திருமண நாளன்று மணப்பெண் கோலத்தில் கல்லறைக்கு வந்த பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வட அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஜெசிகா மற்றும் கெண்டல் ஜேம்ஸ். இருவரும் காதலித்து வந்த நிலையில், 2018-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

தீயணைப்புத்துறை வீரரான ஜேம்ஸ், எதிர்பாராத விதமாக கார் விபத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உயிரிழந்தார். அதிர்ச்சியில் உறைந்த ஜெசிகா, தன் காதலனின் நினைவை வேறு விதமாகக் போற்ற முடிவு செய்தார்.

தங்கள் இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமண நாளான செப்.29-ம் தேதி, தங்களின் பாரம்பரிய திருமண உடையான வெண்ணிற நீண்ட கவுனை அணிந்தார் ஜெசிகா. உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைத்தார். அனைவரும் ஜேம்ஸின் கல்லறைக்குச் சென்றனர்.

அங்கு மணப்பெண் கோலத்தில், காதலனின் கல்லறையில் மணநாளைக் கொண்டாடினார் ஜெசிகா. திருமணத்தின்போது எப்படியெல்லாம் புகைப்படங்கள் எடுக்கப்படுமோ, அப்படியெல்லாம் அங்கும் எடுக்கப்பட்டன.

இந்தப் புகைப்படங்களை ‘லவ்விங் லைஃப் போட்டோகிராபி’ தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதயத்தை உலுக்கும் புகைப்படங்களைக் கண்ட நெட்டிசன்கள், ”ஜேம்ஸின் ஆன்மா எப்போதும் ஜெசிகாவுடன் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளனர்.

Leave a comment