அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது-மனோ

263 0

அனைவருக்கும் பொது மன்னிப்பு எனும் கருத்தை ஒரு ஆரம்ப புள்ளியாக வைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கலாம் என  தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பலர் வெளியே போராட்டம் நடத்துவது போல நான் அரசாங்கத்தினுள் இருந்தும் போராட்டங்களை நடத்திக்கொண்டு தான் இருக்கிறேன். வெளியே நடக்கும் போராட்டம் கண்களுக்கு தெளிவாக தெரியும் போது உள்ளே நடக்கும் போராட்டம் தெளிவாக தெரியாது இருக்கலாம். அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் எனும் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சம்பிக்க ரணவக்க அனைவர்க்கும் பொது மன்னிப்பு எனும் வாதத்தை முன் வைத்தார். அதன் ஊடக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் , இராணுவ தரப்பினரையும் விடுவிக்க வேண்டும் என கோரினார். அது ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தி இருந்தது. அது உடனடியாக தமிழ் தரப்பால் நிராகரிக்கப்பட்டது

என்னை பொறுத்த வரைக்கும் அதனை உடனடியாக நிராகரிக்காமல் அதனை ஓர் ஆரம்ப புள்ளியாக வைத்து பேச்சுக்களை நடத்தி இருக்காமல். சம்பிக்க ரணவக்கவிடம்,  தனிப்பட்ட காரணங்களுக்காக கடத்தல்கள் கொலைகள் செய்த படைத்தரப்பையும் விடுவிக்க வேண்டுமா என கேட்டேன்.  உடனே அவர் இல்லை என அதனை மறுத்தார்.

எனவே யார் அரசியல் கைதிகள் யார் தனிபட்ட குற்றவாளிகள் என்பதனை அறிய வேண்டும் அதற்கு முதலில் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கலாம். எடுத்தவுடனே எல்லாத்தையும் நிராகரிபதனால் எதனையும் பெற முடியாது. பேசுவதன் ஊடாக ஒரு முடிவை பெறலாம். என தெரிவித்தார்.

Leave a comment