சென்னையை பயன்படுத்தி கொழும்பின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என இதுவரையில் நான் கேள்விப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன யுத்தத்தின் இறுதி வாரங்களில் விடுதலைப்புலிகள் சென்னையை பயன்படுத்தி கொழும்பின் மீது தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என நியுயோர்க்கில் தெரிவித்துள்ளார்.
எனினும் எனக்கும் பாதுகாப்பு தரப்பிற்கும் இது புதிய செய்தி என கோத்தபாய ராஜபக்ச பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.
சிறிசேனவின் தகவல் எனக்கு புதியது நானோ அல்லது உலகநாடுகளோ இவ்வாறான ஒரு தகவலை அவ்வேளை பெற்றிருக்கவில்லை எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நான் அவ்வேளை இலங்கையிலேயே இருந்தேன் நான் வேறு எங்கும் செல்லவில்லை எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியல் தலைமை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஜனாதிபதி தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கோத்தபாய ராஜபக்ச யுத்த குற்றங்களில் இருந்து நாட்டை விடுவிக்கவேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதிக்கு தெரியாமலே ஐநா தீர்மானத்திற்கு இணை அனுசரனையை வழங்கும் முடிவை எடுத்துள்ளார் என்பது நிச்சயமாகின்றது எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் இறுதி தருணங்களில் யுத்தத்தை வழிநடத்தியது நானே என ஜனாதிபதி தெரிவிப்பதால் அவரிற்கு என்ன நடந்தது என்பது தெரிந்திருக்கும் இதன் காரணமாக ஐநாவை உடனடியாக இலங்கை மீதா குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சரை இந்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுமாறு சிறிசேன உத்தரவிடவேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் இறுதி தருணங்களில் தானே பொறுப்பாகயிருந்ததாக சிறிசேன தெரிவிப்பதால் அவரே யுத்த குற்றங்களிற்கு பொறுப்பேற்க வேண்டுமா என பிபிசி முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் தொடுத்துள்ள கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர் யுத்த குற்றங்கள் என எவையும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.