தூய்மையான நிர்வாகத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாம்!

192 0

சமகால நல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டில் தூய்மையான நிர்வாகத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அன்று – தகவல் அறிந்துகொள்ளும் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் இன்று அதே சட்டத்தை பயன்படுத்தி தகவல்களை பெற்று எம்மிடமே கேள்வி கேட்கின்றனர் நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 

தலைநிமிர்ந்து நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்லக்கூடிய இளைஞர் சமூகம் ஒன்று தேவை. சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் நாட்டின் தூய்மையான நிர்வாகத்திற்கு வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச தகவல் உரிமைச்சட்ட தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு நெலும் பொகுண தாமரை தடாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 10 வருட காலப்பகுதியில் உலகில் பெருபாலான நாடுகள் இந்த சர்வதேச பிரகடனத்தை தமது நாடுகளில் நிறைவேற்றிக்கொண்டனர். கடந்த வருடங்களில் தகவலை அறிந்து கொள்ளும் சட்டத்தை பல நாடுகள் நிறைவேற்றியுள்ளன. இலங்கையில் இந்த சட்டத்தை முன்னெடுப்பதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது.

தற்போதைய சபாநாயகர் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் இந்த சட்டத்தை நிறைவேற்றி அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கினார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்பொழுது தகவல்களை அறிந்துக்கொள்ளும் உரிமை தொடர்பில் நாட்டில் உள்ள மக்கள் மத்தியிலான தெளிவு அதிகரித்துள்ளது. இதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் அறிந்துகொண்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் அன்று பெரும்பாலான சந்தர்ப்பத்தில் சபாநாயகர் கருஜயசூரிய இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டபோது கூக்குரல் எழுப்பியவாறு செயற்பட்டவர்கள் இன்று இந்த சட்டத்திற்கு அமைவாக தகவல்களை பெற்று எம்மிடமே கேள்விகளை கேற்கின்றனர். அன்று இது வேண்டாம் என்று கூறியவர்கள் இன்று இதன் மூலம் பயனடைகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இதன்போது தகவல் உரிமைச்சட்டத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற விவாதப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் , நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்தன, நிதி மற்றும் ஊடக துறை பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண , நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி R.H.S சமரதுங்க, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்) திருமதி திலகா ஜயசுந்தர, தகவல் அறிந்து கொள்ளும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment