மஹிந்தவின் அழைப்பால் அவசரமாக நாடு திரும்பினார் பசில்

5502 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அவசர அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் இரண்டு மாத கால விடுமுறையை கழித்ததன் பின்னர் எதிர்வரும் 10ம் திகதி இலங்கை வருவதற்காக பசில் ராஜபக்ஷ பயணச்சீட்டினை ஏற்பாடு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினருடன் நேரத்தினை செலவிடுவதற்காகவும் மருத்துவ வேலைகளுக்காகவும் பசில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றிருந்தார்.

இதேவேளை அரசியல் களம் சூடுபிடித்திருப்பதன் காரணமாக கூட்டு எதிர்க்கட்சியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பின் நடவடடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கான தேவைகள் ஏற்பட்டிருப்பதனால் தாமதிக்காமல் உடனடியாக நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பசில் ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்த காலப்பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியதாகவும், குறித்த காலப்பகுதியில் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதான தலைவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment