போதைப்பொருள் நடவடிக்கைகள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட பிரிவு உருவாக்கப்படவுள்ளதாக சட்டம், ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நாடு முழுவதும் 25 விசேட பொலிஸ் குழுக்கள் கொண்ட பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஏற்கனவே இந்நடவடிக்கை தொடர்பாக தெரிவுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் மலையகத்தில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் அண்மைக்காலமாக மலையகத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கு விசேட சுற்றிவைளைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.