பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க. – தமிழிசை

219 0

பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க. என்றும், தி.மு.க.வின் அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரலாறு தெரிந்து பேச வேண்டும் என்று தி.மு.க. செய்தித் தொடர்பாளர் கூறியதால் வரலாற்றை திரும்பி பார்த்தேன். அந்த வரலாற்று துளிகளில் சிலவற்றை கூற விரும்புகிறேன். பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த தி.மு.க.வின் வரலாறு குறித்து பேசலாமா?. இலங்கையில் பல தமிழர்களைக் கொன்றவர்கள் புலிகள். பிரபாகரன் ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் என்பதால், புலிகள் என்றாலே புளித்துப்போய்விட்டது என்றும் கருணாநிதி கூறியது உண்மையா இல்லையா?. தமிழீழ தனிநாடு இனி சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு சிங்களவர்களிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்று கருணாநிதி சொன்னது உண்மையா இல்லையா?.
மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைபுலிகளால் ஆபத்து உள்ளது என்றும் அதனால் அவருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டது உண்மையா இல்லையா?. அதனடிப்படையில் தான் இன்றைக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருப்பது உண்மையா இல்லையா?. தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டி நாடகம் போடும் மு.க.ஸ்டாலினை கேட்கிறேன், அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா?.

எல்லாவற்றிற்கும் மேலாக போரை முடித்து வைக்கிறேன் என்று ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது, பல லட்சக்கணக்கான தமிழர்களை முடித்து வைக்கத் தான் என்று ராஜபக்சே கூறியதை உங்களால் மறைக்கவும் முடியாது. தமிழர்களால் மறக்கவும் முடியாது. கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் அன்றைக்கே போராடியது பா.ஜ.க.வினர் தான் என்பதை உணருங்கள். ஆனால் அன்றைக்கு பதவி சுகத்திற்காக அமைதி காத்த தி.மு.க.வினர் இன்றைக்கு வரலாறு குறித்து பேசுவது வரலாற்று பிழை.

1980-ம் ஆண்டு மதுரை மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கூறியவர் எங்கள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். பா.ஜ.க. ஆட்சியில் இலங்கைக்கு ஆயுதம் வழங்கவும் மாட்டோம், விற்கவும் மாட்டோம் என்ற கொள்கை முடிவெடுத்தவர்கள் நாங்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விடுதலைப் புலிகளையும், இலங்கை தமிழர்களையும் தூண்டி விட்டு, ஆளும் கட்சியாக இருக்கும் போது பதவியை காப்பாற்றிக் கொள்ள தாண்டி செல்லும் கொடுங்கோலர்கள் தான் தி.மு.க.வினர் என்பதை உலகறியும்.

நான் கல்லூரியில் படிக்கும் போதே மாணவியாக இலங்கை தமிழர்களுக்காக களத்தில் இறங்கி போராடியவள். போருக்கு பிறகு இலங்கை தமிழர்களுக்காக வீதி வீதியாக சென்று நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பியவள். இது நாள் வரையில் அவதியுறும் இலங்கை தமிழர்களை கண்டு ஆறுதல் சொல்லக்கூட செல்ல மனமில்லாத, துணிவில்லாத தமிழக அரசியல்வாதிகள், அவர்களின் துயரத்தில் பங்கு கொள்ளாதவர்கள் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததற்கு இணையானவர்கள். ஆனால், நேரடியாக இலங்கை சென்று அங்கே இருக்கும் தமிழர்களின் நிலையை கண்டறிந்து, அவர்களின் தேவைகளை மத்திய அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று தமிழின மக்களின் நல்வாழ்விற்கு பங்காற்றியவள் நான் என்பதை மறந்து விடாதீர்கள்.

உங்களின் தூண்டுதலாலும், அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம். வரலாறு குறித்து எங்களுக்கு பாடம் தேவையில்லை. உண்மையான வரலாறு குறித்த பாடத்தை உங்களுக்கு பா.ஜ.க. புகட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment