ஈழத்தமிழினத்தின் இனவிடுதலைப் போராட்டத்தில் 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதிவரையான நாள்கள் முக்கியத்துவம் மிக்கவை. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த போராளி திலீபனால் சாத்வீக வழியில் சாகும்வரை உண்ணா நோன்பு முன்னெடுக்கப்பட்டு 12ஆவது நாள் தமிழ் இனத்துக்காக அவர் உயிர்த்தியாகம் செய்த அந்தத் தியாக வரலாற்றுக்குரிய மகோன்னத நாள்களாகும்.
ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம், பல்லாயிரக்கணக்கான மாவீரர்களை பதிவில் வைத்திருந்தாலும், சாகும்வரை உண்ணாவிரதமிருந்து தமிழ் இனத்துக்காக உயிர்நீத்த வரலாறு என்பது இராசையா பார்த்தீபன் என்ற திலீபனையே சாரும்.
1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி, அதாவது, இற்றைக்கு 31ஆண்டு வருடங்களுக்கு முன்னர், தாம் முன்வைக்கும் ஐந்து அம்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றிவைக்க இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நல்லூர் வடக்கு வீதியில் சாகும்வரை உண்ணா நோன்பு இருப்பதற்கான முன்னறிவிப்பை இந்திய அரசுக்கு வௌிப்படுத்திவிட்டு தியாகத் தீபம் திலீபன் என்ற போராளி காலை வேளையில் மேடையின் இருக்கையில் அமருகின்றான்.
ஆயுதப்போராளியாகி, பொறுப்பானதொரு அரசியற் போராளியாகி, இறுதியில் பாரத நாட்டுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் அகிம்சை வழியைப் பின்பற்றி தமிழ் மக்களின் நியாயமான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தனது உறுதிமிக்க போராட்டத்தை தொடங்குகின்றான்.
தமிழ்க் கடவுளாம் கந்தப் பெருமான் குடிகொண்டி ருக்கின்ற நல்லூர் ஆலயத்தின் வடக்கு வீதியில் திலீபன் புன்னகைத்த முகத்துடன் இனத்துக்கான வெற்றி பெருமிதத்துடன் காந்தீய தேசத்துக்கும், அரசுக்கும் சவால் விடுத்து உன்னத இலட்சியப் பயணத்தை ஆரம்பித்து தான் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வேண்டுகிறான்.
1.மீளக் குடியமர்தல் என்ற பெயரில் வடக்கு–கிழக்கில் புதிதாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.சிறைக் கூடங்களிலும் இராணுவ, பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
3.அவசர காலச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் முற்றாகக் களையப்படல் வேண்டும்.
5.வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.</strong> என்பனவே திலீபன் முன்வைத்த அந்த ஐந்து அம்சக் கோரிக்கைகளாகும்.
அந்தக் கோரிக்கைகள் யாவற்றையும் அகிம்சை வழியில் போராடிப் பெற இயலும் என்ற நம்பிக்கையை திலீபன் வைத்திருந்த போதிலும், இந்திய அரசையும் நம்பத் தயாரற்ற நிலையில் அவனது மனமிருந்தது. தமிழ் மக்களின் உன்னத இலட்சியத்தை அடைவதற்கு தியாகி திலீபன் அகிம்சை வழியில் போராடியபோது காந்தியத் தத்துவத்தை மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரிக்கின்ற பாரத தேசம், அகிம்சைப் போராட்டத்தை அறவே கண்டு கொள்ளவேயில்லை; மதிப்பளிக்கவும் இல்லை.
திலீபனது அறப்போராட்டத்துக்கு ஆதரவும் உற்சாகமும் வழங்கிய தமிழ் மக்கள்
அதேவேளை தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு தியாகி திலீபனின் அந்த அறப்போராட்டத்திற்கு தினமும் உரமூட்டிக்கொண்டிருந்தனர். நல்லூர்க் கந்தசுவாமி கோயில் வடக்கு வீதியை நோக்கி நான்கு திசைகளிலிருந்தும் சிறுவர்கள், மாணவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை பகலிரவு என்று பாராமல் குறித்த உண்ணா நோன்பு இடம்பெற்ற இடத்தில் கூடியிருந்தனர்.
அவர்கள் மட்டுமன்றி போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள் என திலீபனின் போராட்டத்துக்கு ஆதரவு நல்கும் விதத்தில் இயக்க உறுப்பினர்களும் இணைந்திருந்தனர். திலீபனின் அந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை எப்படியாவது கைவிடச் செய்து முறியடித்துவிட வேண்டும் என்ற அடிப்படையில் அப்போதிருந்த இந்தியத் தூதுவரான ஜே.என்.டிக்ஸிற் மற்றும் இந்திய ‘றோ ’ அமைப்பின் உயரதிகாரிகள், அமைதிப்படையின் உயரதிகாரிகள் முழுமுயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர்.
இரவு நேரத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரான வே.பிரபாகரன் மேடையில் உண்ணாநோன்பை முன்னெ டுத்திருந்த தியாகி திலீபனோடு அருகிலிருந்து உரையாடுவார். ஒரு வாரத்தை எட்டிய நிலையிலும் இந்திய அரசானது திலீபனின் போராட்டத்தையும், ஐந்து அம்சக் கோரிக்கைகளையும் உதாசீனம் செய்துவந்தது. இந்தியாவின் அந்தச் செயலானது தமிழ் மக்களுக்கு எரிச்சலையேற்படுத்தியதுடன் அவர்களைச் சினம் கொள்ளவும் வைத்தது.
உண்ணாநோன்பு மேடையில் இருந்தவாறே தமிழ்மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த திலீபன்
‘‘நான் வாழ்நாள் முழுவதும் நேசித்த என் அன்புக்குரிய மக்களே! புரட்சிக்குத் தயாராகிவிட்டீர்களா? நான் மீட்க முடியாத இடத்துக்குச் சென்று கொண்டிருக்கின்றேன். நீங்கள் பெருந்தலைவனின் பின்னால் போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள். வானத்தில் இருந்து எனது இனத்தின் விடுதலையை நான் பார்ப்பேன். நான் சாகும்போது மகிழ்ச்சியுடன் சாகின்றேன். மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’’. என்று அவனது ஆத்மாவின் குரல் தமிழினத்தின் உரிமைக் குரலாக வௌிப்பட்டது.
நல்லூர் வீதியில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திலீபனது உரைகேட்டுக் கண்ணீர் வடித்தனர். காந்திதேசம் எனப் புகழப்படுகின்ற இந்தியா, திலீபனது போராட்டம் தவறானது எனத் தப்புக்கணக்குப் போட்டது. இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் உண்ணா நோன்புப் போராட்டம் எந்த வகையில் குறைந்தது என எண்ணிய இந்தியா , மகாத்மா காந்தி நீர் அருந்தித்தானே நோன்பிருந்தார். திலீபன் நீர்கூட அருந்தாது நோன்பிருப்பது காந்திய வழியா? எனக்கூறி அவமானப்படுத்தியதுடன் ஏளனமும் செய்தது.
திலீபன் உண்ணா நோன்பை உறுதியாகக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்தியத் தூதுவரான ஜே.என்.டிக்சிற் அவ்விடத்துக்குச் சென்று நிலைமையை அவதா னித்துவிட்டுச் சென்றார். அவரிடமிருந்து எந்தத்தகவலும் வெளிவரவில்லை. இந்திய தேசமானது திலீபனது உண்ணா நோன்புப் போராட்டத்தின் இறுதி நாள்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில், திலீபனின் அறப்போராட்டத்தைக் கண்டுகொள்ளாது இரக்கமே இல்லாது திலீபன் சாவடையும் நாள்களை எண்ணிக் கொண்டிருந்தது.
உலகத்துக்கே அகிம்சையைப் போதித்ததாகப் பறைசாற்றும் இந்தியாவைப் பின்பற்றி, அதே அகிம்சையை ஆயுதமாக வைத்து தமிழ் மக்களின் பிரச்சி னைகளைத் தீர்க்கமுடி யும் என விடுதலைப்புலி கள் நம்பினர். அந்த நம்பிக்கையுடன் தான் தமிழர்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, விடுதலைப் புலிகளின் தலைமையின் கட்டளைக்கமைவாக, செயல்வடிவம் கொடுப்பதற்கு, அகிம்சைப் போராளியாக திலீபன் முன்வந்தமையானது தமிழ் மக்களின் விடி வுக்கான போராட்டத்தில் தனக்கும் ஒருமுக்கிய பங்கு இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது.
தனது வாழ்வையே தமிழ் இனத்தின் விடிவுக்காய் அர்ப்பணித்த தியாகி திலீபன்
அகிம்சையின் உன்னத வடிவமாகத் திகழுகின்ற தியாக தீபம் திலீபனின் சொந்த ஊர் ஊரெழுவாகும். சிறுவயதில் தாயாரையிழந்து, சிறுபராயத்தி லிருந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தான். 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி பிறந்த இராசையா பார்த்தீபன், ஆரம்பக்கல்வியை தமது கிராமப்புற பாடசாலையில் கற்று, பின்னர் உயர்தரக் கல்வி கற்பதற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இணைந்து கொண்டான்.
கல்வியில் திறமை கொண்ட மாணவனான திலீபன் மருத்துவபீடத்திற்கு தெரிவாகிய நிலையில், அந்த அரிய வாய்ப்பைத் தூக்கியெறிந்துவிட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டான். படிக்கின்றபோதே அரசியல் நடவடிக்கையிலீடுபட்டிருந்த திலீபன், இயக்கத்தில் சேர்ந்து கொண்டதும் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அப்போதைய யாழ் மாவட்டத் தளபதியான கிட்டுவால் நியமிக்கப்பட்டிருந்தான்.
திலீபனின் பேச்சும், செயலும் விடுதலைக்கு உரமூட்டின. துடிப்பான இளைஞனாக, போராளியாக வலம் வந்தான். யாழ் மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமாகியிருந்த போராளியான திலீபன், வடமராட்சிப் பகுதியில் நடைபெற்ற இலங்கை இராணுவத்துடனான நேரடி மோதலில் பலத்த காயத்துக்குள்ளாகி வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் சிதைந்திருந்தது. சத்திரசிகிச்சைக்குப்பின்னர் வைத்தியர்களின் அறிவுரைக்கிணங்க நடக்கும்படி ஆலோசனை கூறப்பட்டிருந்தது. அதனையும் மீறி தனது அரசியல் நடவடிக்கைகளிலீடுபட்டு வந்தான்.
தியாகம் என்றால் திலீபன், திலீபன் என்றால் தியாகம் என்று கூறுகின்ற அளவுக்கு அவன் மேற்கொண்ட போராட்டமானது, அதி உச்சத்தைத் தொட்டு நின்றது. 12நாள்களாக உண்ணா நோன்பிருந்து தியாகத் தீயில் ஆகுதியான திலீபனின் நாமத்தை இன்றும் ஒவ்வொரு தமிழ் மகனும் உச்சரிக்கின்றபோது எமது உடம்பிலுள்ள நரம்புகள் சிலிர்த்து நிற்கும்
1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமையன்று முற்பகல் 10.48 மணியளவில், தான் உறுதியாகப் பின்பற்றிய கொள்கைகளை காற்றிலே பறக்கவிடாமல், மண்ணிலே புதையவிடாமல், கண்ணீரில் கரையவிடாமல் தமிழ் மக்களிடம் கொடுத்துவிட்டு நல்லூரான் வீதியில் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து தியாகி திலீபன் விடைபெற்றுக் கொண்டான்.
திலீபனின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் திலீபன் உயிர்த் தியாகம் செய்த நாள்வரை திலீபனது தமிழ்மக்களுக்கான தியாகத்தை தமிழர் தாயகம் உட்பட புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களும் ஒன்று சேர்ந்து நினைவு கூர்கிறார்கள்.
திலீபன் வகுத்தது பாதையா சின்ன வயதில் இது தேவையா? என்ற உணர்ச்சிக் கவிஞன் ஆனந்தனின் வரிகள் காதில் ரீங்கார மிட்டுக் கொண்டிருக்கின்றன. இனவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவன்; அகிம்சை வழியில் தனக்கு நிகர் தானே என்பதை தமிழுலகத்திற்கும் இந்தியாவுக்கும் பறைசாற்றி உயிராயுதம் ஏந்தியவன்; அந்தப் பார்த்தீபன் இன்றும் தீராத பசியோடு இருக்கின்றான். உறுதியின் உறைவிடம் தியாக தீபம் திலீபனை ஒரு கணமாவது நினைவில் இருத்தி மனதார நினைவு கூரவேண்டிய வரலாற்றுக் கடமை எமது தமிழ்மக்களுக்கு உண்டு.