பாடசாலை பாடத்திட்டத்தில் புதிய விடயத்தை புகுத்த நடவடிக்கை- தலதா அத்துகோரள

260 0

நாட்டு சட்டம் தொடர்பில் பாடசாலை பாடவிதானங்களில் உள்வாங்கி மாணவர்களை தெளிவூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன்மூலம் மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான சட்டத்தை கற்பிக்கமுடியும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டு சட்டம் தொடர்பில் பாடசாலைகளில் தெளிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன்.

பாடசாலையின் ஆறாம் தரத்தின் பாடவிதானத்தில் சட்டம் தொடர்பான பாடம் ஒன்றை உள்வாங்கவிருக்கின்றோம். இதன்போது சட்டம் என்றால் என்ன, சட்டத்தை மீறினால் ஏற்படும் தண்டனை மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் கிடைக்கும் தண்டனை போன்றன உள்வாங்க இருக்கின்றோம்.

அத்துடன் நாட்டின் சட்டம் தொடர்பில் ஆறாம் தரத்தில் இருந்து 11ஆம் தரம்வரை படிப்படியாக கற்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

11ஆம் தரத்தில் நாட்டின் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் தண்டனை வழங்க முடியுமானவை மற்றும் எவ்வகையான தண்டனை என்பது தொடர்பில் கற்பிக்கவுள்ளோம். அதேபோன்று மரண தண்டனை பெறக்கூடிய விடயங்களும் கற்பிக்கப்படும். என தெரிவித்தார்.

Leave a comment