இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ள கருத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.
இக்கருத்து தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அக்கட்சியின் உபதலைவரும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“சரணடைந்திருந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின், தாய், தந்தையையே பாதுகாத்த இராணுவம் மீது, புலம் பெயர் தமிழ் அமைப்புகள் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறது.
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா நாடுகள் தங்களது நாட்டு இராணுவ வீரர்களை யுத்தக் குற்றசாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை தெரிவித்துள்ளது.
அதுபோல எமது நாட்டு இராணுவ வீரர்களை யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான எந்தவொரு விசாரணைகளுக்கும் உட்படுத்த இடமளிக்கப்போவதில்லை. அரசாங்கம் இந்நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.” என்றார்.