நாலக சில்வா தொடர்பில் விசாரிக்க உத்தரவு-பூஜித்

229 0

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வா தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது கிழக்கு மாகாணத்தில் வைத்து தாக்குதல் செய்யும் திட்டத்தில் இருந்ததாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார நேற்று (12) கண்டி பிரதேசத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்ததுடன், இதுதொடர்பான ஒலிப்பதிவுகளையும் வௌியிட்டிருந்தார்.

கிழக்கில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை வேறு பக்கம் திருப்பிவிடலாம் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கூறியதாக ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார கூறினார்.

அத்துடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லதீப் உட்பட மேலும் சில பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு எதிராகவும் நாலக சில்வா திட்டம் தீட்டுவது சம்பந்தமான ஒலிப்பதிவுகள் நேற்றைய ஊடக சந்திப்பில் வௌியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குறித்த ஒலிப்பதிவுகள் மற்றும் நாலக சில்வா மீது விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment