பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் அரச துறைகளிலுள்ள அபிவிருத்தி அதிகாரிகள் நாளை (12) நண்பகல் கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை அரச அபிவிருத்தி அதிகாரிகளின் கூட்டு தொழிற்சங்க செயலாளர் அசோக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்கள் தினமாக கருதப்படும் புதன்கிழமை ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் அண்மையில் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் அபிவிருத்தி அதிகாரிகளாக இணைத்துக் கொள்ளப்பட்ட 4 ஆயிரம் பட்டதாரிகளை ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்று மாதாந்த சம்பளத்திட்டத்துக்குள் உள்வாங்க வேண்டும், சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் போக்குவரத்து கொடுப்பனவை பெற்றுக் கொள்ளல், அரசாங்கத்தினால் முன்னெடுக்கும் அபிவிருத்தி செயற்திட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளனர்.

