தலைவர் பிரபாகரனுக்கு விஷம் கொடுக்க நினைக்கவில்லை! – பந்துல குணவர்தன

212 0

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தாம் வீழ்த்த நினைத்தபோதிலும், அவர் உண்ணும் உணவில் விஷம் வைத்து, அவரைக் கொலை  செய்ய ஒருபோதும் நினைத்ததில்லை எனத் தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணி, அரசாங்கத்துக்கு எதிராக ஜனநாயக வழியில், ‘ஜனபலய’ எதிர்ப்பு பேரணியில் கலந்துக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட பக்கற் பாலில் விஷம் கலக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம், நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதெனவும் தெரிவித்துள்ளது.

புஞ்சி பொரளையிலுள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று(09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே, அவ்வணியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து கொள்வனவுச் செய்யப்பட்ட பால் பக்கற்றுகளே, இவ்வாறு விஷம் கலந்து விநியோகிக்கப்பட்டுள்ளதென, பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
​ஆகவே, மேற்படி விவகாரம் தொடர்பில், பொலிஸார் முறையாக விசாரணைகள் மேற்கொண்டு, பால் பக்கற்றுகளில் விஷம் கலந்தவர்​களை கண்டறிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “இறக்குமதிச் செய்யப்படும் துணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 15 சதவீத வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 15 ஆம் திகதி, துணி வியாபாரிகளுடன் இணைந்து மஹரகமவில் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம்” என்றார்.

மேலும் இந்த வரி விதிப்பினால், வெளிநாடுகளிலிருந்து துணிகளை இறக்குமதிச் செய்வோர், சுமார் இரண்டு மில்லியன் ரூபாய்க்கு அதிகமான ‌தொகையை வரியாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால், துணிகளை ஏற்றிவந்த 200 கொள்கலன்கள், துறைமுகங்கத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment