செயலணிக் கூட்டத்தில் கலந்துகொள்வதால் அரசியல் தீர்வுக்கு பாதிப்பு ஏற்படாது!

15325 0

ஜனாதிபதியின் செயலணிக் கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்து கொள்வதனால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்விலோ அல்லது இதர விடயங்களிலோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளெட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் செயலணிக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது அந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தனிடம் கோரிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றக் கூட்டத்தில் கட்சித் தலைவரால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டிருந்தது. ஆனாலும் ஐனாதிபதி செயலணியில் கலந்து கொள்ள வேண்டுமென பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததற்கமைய செயலணியில் கலந்துகொள்வதேன பாராளுமன்றக் குழு தீர்மானித்திருந்தது.

மேலும் இந்த தீர்மானமானது முதலமைச்சரை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செற்படும் முடிவென்றும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுரேஸ் பிரேமச்சந்திரன் விமர்சித்திருந்தார்.

இந் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் கடந்த சில தினங்களிற்கு முன்னர் நடைபெற்றிருந்தது. அதன்போது ஐனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளக் கூடாதென வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ள விடயம் குறித்து பேசப்பட்டது. அதன் போது எமது மக்களுக்காக அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

அந்த முடிவானது கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ரொலோ ,புளொட், மற்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்தே எடுத்திருந்தது. அதில் நான் கலந்து கொள்ளாது விடினும் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டிருந்தார்.

இப்படியே தீர்வு வரும் தீர்வு வருமென்று கடந்த பல வருடமாக இழுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்காக இனியும் அபிவிருத்தி வேலைகளில் நாங்கள் பங்கெடுப்பதை தவிர்த்துக் கொண்டிருக்காமால் அபிவிருத்தியையும் செய்து கொண்டு அரசியல் தீர்வையும் நோக்கிப் பயணிப்போம் என்று கூறியே அத்தகையதொரு முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது. அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஏனெனில் இக் கூட்டத்திற்குப் போகாமல் விடுவதால் உடனடியாக அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து தீர்வைக் காணப் போவதில்லை. ஆகையினால் அதற்குப் போவதால் இயலுமான வேலைகளைச் செய்து கொண்டு பயணிக்கலாம் என்று நினைக்க முடியும் என்றார்.

Leave a comment