மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர், உடன் செல்வோர் ஹெல்மெட் அணியாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை

417 0

மோட்டார் சைக்கிளை ஓட்டுபவரும், உடன் செல்வோரும் கட்டாயம் ‘ஹெல்மெட்’(தலைகவசம்) அணியாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறியிருந்தார்.

இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 129 மற்றும் அரசாணை எண் 22.02.2007-ன் படி இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர் ஆகிய இருவரும் ‘ஹெல்மெட்’ கட்டாயமாக அணிய வேண்டும்.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ‘ஹெல்மெட்’ அணியாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனினும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ‘ஹெல்மெட்’ அணியாமல் இருப்பது காணப்படுகிறது.

எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதியும், சாலை விபத்துகளில் ‘ஹெல்மெட்’ அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும்.

‘ஹெல்மெட்’ அணியாமல் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஆகிய இருவர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment