‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்!

625 0

மனுஷ்யபுத்திரன் புகாரில் ஹெச்.ராஜா என்பதை பி.ராஜா என்று தவறாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி அது யாரோ ராஜாவாம் நாம் இல்ல சபையைக் கலையுங்கள் என்று ஹெச்.ராஜா கிண்டலடித்துள்ளார்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் கடந்த 18-ம் தேதி ஊழியின் நடனம் என்ற தலைப்பில் இயற்கை சீற்றம், மழை வெள்ளத்தைப் பற்றி பொதுவான ஒரு பெண்ணை மையமாக வைத்து வர்ணித்து கவிதை எழுதி அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

இது குறித்து ஹெச்.ராஜா மனுஷ்யபுத்திரனின் கவிதையைப் பதிவு செய்து காவல்துறையில் புகார் அளியுங்கள் என்று போட்டிருந்தார். இதையடுத்து ஹெச்.ராஜா தனக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் புகார் அளித்தார்.

அந்தப் புகார் மனுவில், ”என் கவிதையில் எந்த ஒரு மதத்தையோ, மதம் சார்ந்த கடவுளைப் பற்றியோ குறிப்பிடவில்லை. களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் எழுதவும் இல்லை. ஆனால் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, எனது கவிதையை இந்துக் கடவுளுக்கு எதிரான களங்கம் கற்பிக்கும் கவிதை என தனது ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதிவிட்டு என் மீது வழக்குப் பதிவு செய்ய அனைவரையும் தூண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனால் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஹெச்.ராஜா மீதும், மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மனுஷ்யபுத்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் சுப.வீரபாண்டியன் ஹெச்.ராஜா இருவரும் மோதிக்கொண்டனர். மனுஷ்யபுத்திரன் தனது புகாரில் ஹெச்.ராஜா என்பதை பி.ராஜா என்றே அனைத்து இடங்களிலும் குறிப்பிட்டிருந்தார். இதைக் கிண்டலடித்துள்ள ஹெச்.ராஜா அவர் யாரோ பி.ராஜாவாம் அவருக்கு எதிராகத்தான் புகார் தந்துள்ளார். நம் ஆதரவாளர்கள் ஹெச்.ராஜா னு தப்பா நினைக்க வேண்டாம் என்று கிண்டலடித்துள்ளார்.

Leave a comment