நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மேனேஜர் லண்டனில் கைது

324 0

மும்பை குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சதிகாரன் சர்வதேச நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் மேனேஜர் ஜபிர் மோட்டி என்பவனை லண்டனில் போலீசார் கைது செய்துள்ளனர். 

1993-ம் ஆண்டில் முன்னூறுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை தேடப்படும் பயங்கரவாதியாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

துபாயில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நம்பப்படும் தாவூத் இப்ராஹிம் அங்கிருந்தவாறு கூட்டாளிகளையும், கூலிப்படையினரையும் வைத்து இந்தியாவில் ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களை செய்து வருகிறான்.

மேலும், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த துடிக்கும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிகளை செய்து ஆதரித்து வருகிறான். நிழல் உலக வாழ்க்கையான தாதா தொழிலில் இன்றும் கொடிகட்டி பறந்து வரும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான், பிரிட்டன், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறான்.
இந்நிலையில், தாவூத் இப்ராகிமின் நிதி விவகாரங்களை கவனித்து வரும் ஜபிர் மோட்டி என்பவனை லண்டன் நகரில் உள்ள ஹில்டன் ஓட்டலில் போலீசார் கைது செய்துள்ளனர்.பாகிஸ்தான் நாட்டை பூர்விகமாக கொண்ட ஜபிர் மோட்டி பத்தாண்டு காலத்துக்கு பிரிட்டன் நாட்டு குடியுரிமை பெற்று லண்டனில் தங்கி வந்துள்ளான்.

தாவூத் இப்ராகிம் மட்டுமின்றி அவனது மனைவி மஹ்ஜபீன், மகன் மொயீன் நவாஸ், மகள்கள் மஹ்ரூக், மெஹ்ரீன், மாஸியா, மருமகன்கள் ஜுனைத், அவுரங்கசிப்  ஆகியோரின் வரவு-செலவு விவகாரங்களையும் ஜபிர் மோட்டி தான் கையாண்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவனிடம் இனி லண்டன் போலீசார் நடத்தும் விசாரணையில் தாவூத் இப்ராகிமின் மொத்த சொத்துகள், முதலீடுகள் தொடர்பான விபரங்கள் மட்டுமின்றி இதர கூட்டாளிகள் பற்றிய ரகசியங்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a comment